ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இக்கோவிலில் கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு அதற்காக ரூ. 30 லட்சம் செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது ஆண்டாள் கோவில் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.
இதையடுத்து கும்பாபிஷேகம் செய்வதற்காக பணிகள் நடைபெற்றன. அதன்படி கடந்த 16-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பதி கோவில், மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து வஸ்திரம், பட்டுப் புடவை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டு ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு சாத்தப்பட்டது.
காலை 10.05 மணிக்கு வேதமந்திரங்கள் ஓத ராஜ கோபுரம் மற்றும் ஆண்டாள் தங்க விமானத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர் .கோவிலின் ஆண்டாள் சன்னதி கோபுரம் தங்க தகடு வேய திட்டமிடப்பட்டு இதற்காக ரூ.25 கோடி மதிப்பிலான 78 கிலோ தங்கம் சேகரிக்கப்பட்டு புதிய தங்க விமானம் அமைக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்தது.
கும்பாபிஷேகத்தை யொட்டி கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் இன்று நடந்தது.நகரில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன. கும்பாபிஷேகத்தை யொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த விழாவில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


