சமத்துவ மக்கள் கட்சியில் மாநில மகளிரணி துணைச் செயலாளராகவும் ஆலந்தூர் தொகுதிச் செயலாளராகவும் அவர் பதவி வகித்து வந்தவர் மா.ரா.ஜெமிலா. அவரை சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
மா.ரா.ஜெமிலா நேற்று முன்தினம்அவரது முகனூல் பக்கத்தில் கூறியதாவது :
சமகவில் உட்கட்சி ஜன நாயகம் இல்லை. “சமூக மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று சமகவில் சேர்ந்தேன். ஆனால், சமகவில் உட் கட்சி ஜனநாயகம் இல்லை. அதன் வெளிப்பாடாகத்தான் தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த உதய குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத் தப்பட்ட ரயில் மறியல் போராட்டத்தின் போது மத்திய சென்னை மாவட்ட நிர்வாகி ஒருவரை கட்சியைச் சேர்ந்த சிலரே தாக்கினர். கட்சியிலுள்ள 2-ம் நிலை நிர்வாகிகள் சிலர் பெண்களை மதிப்பதில்லை.
இது தொடர்பாக தலைமையிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கட்சியில் இருந்து விலகியுள்ளேன் .பெண்களுக்கு மதிப்பில்லை என்று கூறி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மா.ரா.ஜெமிலா கட்சிக்கு எதிராக கருத்துகளை கூறி வருவதால் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று அறிவித்தார்.
சமத்துவ மக்கள் கட்சியின் நிதி ஆலோசகர் பொறுப்பில் இருந்த டாக்டர் ராஜசேகரும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


