ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் வடக்கு சியாச்சின் சிகரத்தில் 19,600 அடி உயரத்தில் அமைந்துள்ள ராணுவ நிலை பனிச்சரிவில் புதைந்தது. அப்போது பணியில் இருந்த ஒரு இளநிலை ராணுவ அதிகாரி மற்றும் 9 வீரர்கள் உயிருடன் புதைந்தனர். அவர்கள் அனைவரும் மெட்ராஸ் பட்டாலியனை சேர்ந்தவர்கள்.அவர்களை மீட்பதற்காக ராணுவம் மற்றும் விமானப்படையில் உள்ள சிறப்பு மீட்புப்படையினர் ஏராளமானவர்கள் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டனர். மோப்ப நாய்கள், பனிக்கட்டிகளை உடைக்கக்கூடிய எந்திரம் உள்பட பெரிய கருவிகளும் அனுப்பப்பட்டன. மோசமான பருவநிலை மற்றும் பனிக்கட்டிகளை உடைத்துக் கொண்டு செல்ல வேண்டியது இருப்பதால், மீட்புப்படையினர் பனிச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு பனிச்சரிவில் சிக்கி புதைந்துபோன 10 ராணுவ வீரர்களும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர். ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் இதனை அறிவித்தார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ‘சியாச்சின் சிகரத்தில் 10 ராணுவ வீரர்கள் இறந்தது மிகவும் துயரமானது என்று, நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை இழந்த அந்த துணிச்சல் மிகுந்த வீரர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

