புது தில்லி:
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் சட்டத் திருத்தங்களை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. “பஞ்சாயத்து சட்டம்’ தொடர்பான 2 நாள் பயிலரங்கை தில்லியில் மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சர் வீரேந்தர் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.
அந்தப் பயிலரங்கில அவர் பேசியபோது, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் சட்டத் திருத்தங்களை, வரும் 23-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மேற்கொள்ள முயற்சிக்கப்படும். தற்போது, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வெற்றி பெறும் பெண் வேட்பாளர்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக உள்ளது. இந்த பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பெண்களால் தலைமைப் பண்பை வலுப்படுத்திக் கொள்ளவும், பொதுப் பணிகளில் ஆர்வமாக ஈடுபடவும் முடியும் எனறார்.


