தன் மனைவி 15 பேரைத் திருமணம் செய்துவிட்டு, தன்னையும் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக திருச்சியில் ஒருவர் காவல் துறையில் புகார் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தன்னிடம் இருந்து பணம், நகைகளை திருடிக்கொண்டு தப்பிவிட்டதாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.
திருவாருர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த உதயகுமார் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இவர், ஆன்லைன் மூலம் திருச்சி கருமண்டபம் நேரு நகரை சேர்ந்த மகாலட்சுமி என்பவரை சந்தித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.
திருமணம் முடிந்த சில நாட்களில் உதயகுமார் மீண்டும் சிங்கபூருக்குச் சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து மகாலட்சுமிக்கு போன் செய்தபோது, அவர் தாம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த உதயகுமார், உற்சாகத்துடன் தன் சொந்த ஊரான மன்னார்குடிக்கு திரும்பியுள்ளார். ஆனால் அங்கு வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் பெரிய பூட்டு தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்லார். அப்போது அவர்கள், அந்தப் பெண் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர்.
உடனே அவர் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்ததாம். தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். பின்னர் வேறு வழியின்றி, மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் “மனைவியை காணவில்லை” என்று புகார் கொடுத்துள்ளார்.
அதன்பின்னர், மனைவி பயன்படுத்தும் இமெயிலை ஆய்வு செய்துள்ளார். அப்போது அவருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் பல கிடைத்துள்ளன.
மகாலட்சுமி ஏற்கெனவே பல ஆண்களைத் திருமணம் செய்து, அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அந்த இமெயிலில் இருந்துள்ளன. மேலும், பலருடன் ஆபாசமாக அவர் சாட் செய்திருப்பதும் சாட் மூலம் அவருக்கு தெரியவந்துள்ளது. மேலும், முதல் கணவரால் கரு உண்டான போது ஏதோ தகராறில் அவர் எட்டி உதைத்ததும், அதில் மகாலட்சுமியின் கரு கலைந்திருப்பதும் அந்த தகவல்களில் தெரியவந்தது.
இதனால் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த உதயகுமார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். அந்நேரம், திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திலிருந்து போன் செய்த போலீஸார், கர்ப்பம் அடைந்திருந்த தன்னை தன் கணவர் உதயகுமார் எட்டி உதைத்ததில் கரு கலைந்துவிட்டதாக மகாலட்சுமி என்பவர் புகார் கொடுத்துள்ளார் என்றும் அதற்கான விசாரணைக்கு ஆஜராகுமாறும் கூறியுள்ளனர். .
இதனிடையே, திருச்சி உறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகாலட்சுமி கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரங்களைத் திரட்டிய உதயகுமார், அதையும் எடுத்துக் கொண்டு, காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
பின்னர் இது குறித்து உலகத்துக்குத் தெரியப் படுத்த செய்தியாளர்களை அழைத்த உதயகுமார், தன்னை ஏமாற்றி 25 பவுன் நகை, 5 லட்சம் பணம் ஆகியவற்றை சுருட்டிக் கொண்டு மகாலட்சுமி ஓடி விட்டார். அவர் தற்போது ஆந்திரா பக்கம் உள்ளதாக அறிந்தேன். தனக்கு தந்தை இல்லை என்று முதலில் கூறி பரிதாபத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் அவர் இதற்கு முன் 15 பேரை திருமணம் செய்துள்ளார். என்னையும் ஏமாற்றி உள்ளார் என்று கூறினார்.
திருச்சி வட்டாரத்தில் இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, இந்தப் படங்கள் மேட்ரிமொனி தளங்களில் ப்ரொபைலில் வெகுகாலமாகவே இடம் பெற்றிருந்தன. தமிழகத்தின் பிரபலமான திருமண இணையதளங்களில் இந்தப் படம் இடம்பெற்றிருந்தது. திருமண இணையதளங்கள் மூலமே இவர் பலரையும் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகக் கூறப் படுகிறது.