சென்னை:
தேசியத் தலைவரான ராகுல் காந்தியை தமிழக முதல்வராகப் பார்ப்பதா? என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மகளிரணி மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து விவாதித்தார். பி9ன்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,
மத்திய அரசு உயிர்காக்கும் 76 வகை மருந்துகளுக்கு இறக்குமதிக்கான வரிச் சலுகையை ரத்து செய்திருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனால் மருந்துகள் விலை உயர்ந்து நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இந்தியாவில் அதிக அளவில் மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் எச்.ஐ.வி., புற்றுநோய், உடல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதிக ரத்தக்கசிவு போன்ற பல்வேறு நோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகள் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே உயிர் காக்கும் மருந்துகளை இந்தியாவில் தயாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இலங்கை பயணம் தமிழக மீனவர் பிரச்னையில் நல்ல தீர்வினை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.
ராகுல்காந்தி தமிழக முதல்வராக வரவேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசி வருகிறார். ராகுல் காந்தியை ஒரு தேசிய தலைவராகத்தான் த.மா.கா பார்க்கிறது. மாநிலத் தலைவராக அல்ல என்று தனது அதிர்ச்சியை அப்போது வெளியிட்டார் ஜி.கே.வாசன்.


