இரு தினங்களுக்கு முன்னர் திமுக., பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த ஐடி ரெய்டு குறித்து கருத்து தெரிவித்த துரைமுருகன், “என் வீடு, கல்லூரியில் 24 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை. மோடியும், எடப்பாடியும் வருமானவரித் துறையை ஏவி விட்டு தி.மு.க-வை தொட்டுப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நான் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்’’ என்று கூறினார்.
ஆனால், அவரது வீட்டில் இருந்து அவரது மகனுக்குச் சொந்தமான கிங்க்ஸ்டன் கல்லூரிக்கும் கல்லூரியில் இருந்து சிமிண்ட் குடோனுக்கும் பணம் ரகசியமாகக் கொண்டு செல்லப் பட்டதாகக் கூறப் படுகிறது. எனவேதான் அட்டைப் பெட்டி, தளபதி என பெயர் எழுதப் பட்ட கோணிச் சாக்கு மூட்டைகள் என பணம் கொண்டு செல்லப் பட்டுள்ளது. இதனால்தான் துரைமுருகன்… ‘பணம்’காட்டு நரி என்றாரோ என அதிசயிக்கின்றனர் மக்கள்!
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். மகனை ஆதரித்து, தொகுதி முழுவதும் துரைமுருகன் சூறாவளி பிரசாரம் செய்துவருகிறார்.
என் மகனுக்கு ஆங்கிலம் தெரியும்! ஹிந்தி இங்க்லீஷ் தெரியாம நாடாளுமன்றத்துக்குப் போகுறதும், பஸ்ஸ்டாண்ட்ல உக்காந்துக் கிட்டிருக்கிறதும் ஒன்னுதான் என்று பேசி ஆதரவு திரட்டினார். இப்போது, பணத்தால் அடிக்க ஆயத்தமாகிவருகிறார்.
இதை மோப்பம் பிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள், பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக, காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் 29-ம் தேதி இரவு முதல் 30-ம் காலை வரை சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள துரைமுருகனின், கிங்க்ஸ்டன் கல்லூரி மற்றும் பள்ளிக்கு 10 கார்களில் வந்த 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 30-ம் தேதி இரவு வரை சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக அப்போது துரைமுருகன் கூறுகையில், ‘‘என்னுடைய வீடு, கல்லூரியில் வருமானவரித் துறையினர், 24 மணிநேரமாகக் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு, எங்கேயாவது தவறு இருக்கிறதா என்று தேடி தேடிப் பார்த்தார்கள்.
கிங்க்ஸ்டன் கல்லூரியில், 12 மணி நேரத்துக்கும் மேலாக அலசி எடுத்து விட்டார்கள். சேர்மன் அறை முதல் எல்.கே.ஜி மாணவர்களின் வகுப்பறை வரை சல்லடைப் போட்டு சலித்துள்ளனர்.
விடுதியில் கபோர்டுகள் உடைக்கப்பட்டுள்ளன. கடைசியில், கணக்கு வழக்குகள் சரியாக இருக்கிறது. நீங்கள் சட்டத்தை மீறவில்லை. எனவே, நாங்கள் எந்தப் பொருளையும் கைப்பற்றவில்லை. உங்களிடத்தில் எந்த குற்றத்தையும் காண முடியவில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் சென்றுவிட்டனர்.
எங்களின் தேர்தல் பணியை நிறுத்திவைக்க வேண்டும் என்பதற்காகவே, வருமானவரித் துறை ஏவப்பட்டுள்ளது. மென்டல் டார்ச்சர் கொடுத்தால், நாங்கள் சோர்ந்துவிடுவோம் என்று கனவு கண்டார்கள்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், ஒரு கட்சியின் பொருளாளர், 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருப்பவர், 80 வயதை எட்டிப்பிடிப்பவர் போன்றவற்றைக்கூட பார்க்காமல், ஏதோ கோடி கோடியாய் சேர்த்து வைத்திருப்போம். கூடை கூடை அள்ளிக் கொண்டு போய்விடலாம் என்று நினைத்தார்கள். அதிகாரிகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம். மோடி மற்றும் எடப்பாடி அரசு, இப்படி ஒரு ஏவலைச் செய்திருக்கிறார்கள்.
வேலூர் நாடாளுமன்ற வேட்பாளரான என் மகனை 24 மணி நேரமாக அதிகாரிகள் தூங்கவிடவில்லை. தந்தை என்ற முறையில் கதிர்ஆனந்தை பார்க்கும்போது, பாசத்தில் கண்ணீர் வந்தது.
என் வீட்டிலிருந்து, ரூ.10 லட்சம் எடுத்துச் சென்றுள்ளனர். அந்தப் பணத்தை செலவுக்கு வைத்திருந்தேன். ஒவ்வொருவரும், இவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. அந்தப் பணத்தை அதிகாரிகள் எடுத்துச் சென்றதைப் பற்றி கவலையில்லை. தி.மு.க-வை தொட்டுப்பார்க்க ஆரம்பித்திருக் கிறார்கள். நான் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு அஞ்சமாட்டேன். கதிர் ஆனந்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பேன்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் காட்டுவதற்காக, பொட்டி பொட்டியாக, மூட்டை மூட்டையாக வைத்திருந்ததும், அதை சொந்த செலவுக்கு என்று துரைமுருகன் பொய் சொன்னதும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எப்படியோ… தான் ஒரு ‘பணம்’ காட்டு நரி என்று நிரூபித்து விட்டார் துரைமுருகன்!