நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரான துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,ஸின் மகன் ரவிந்திரநாத் வெற்றி பெற்றார். அதேநேரம், அதிமுக.,வில் போட்டியிட்ட மற்ற அனைவருமே தோல்வியைத் தழுவினர். மேலும், தேமுதிக., பாமக., பாஜக., ஆகிய கூட்டணிக் கட்சிகளும் தோல்வியை சந்தித்தன.
நாடு முழுதும் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்ற போதும், தமிழகத்தில் இருந்து பாஜக.,வுக்கு உறுப்பினர் எவரும் தேர்வாகவில்லையே என்று பாஜக., தலைமை தீவிரமாக கவலையுடன் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சர் பதவிக்காக ஆசைப்பட்டு அதற்கான காய்களை தந்தையுடன் இணைந்து நகர்த்தினர். ஆனால், கட்சியில் ஜூனியரான ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கோஷ்டியை சேர்ந்த மூத்த தலைவர்கள் போர்க் கொடி தூக்கினர். இதனால் எம்.பி.ஆகியும் அமைச்சர் ஆக முடியவில்லையே என்று ரவீந்திரநாத் கவலையில் ஆழ்ந்துவிட்டார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் பதவி வேண்டுமானால் பா.ஜ.க.,வில் இணைந்துவிடலாம் என்று ரவீந்திரநாத்துக்கு சிலர் ஆலோசனை கூறியதாக செய்திகள் வெளியாகின. அப்படி ரவீந்திரநாத் பா.ஜ.க.,வில் ஐக்கியம் ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ரூட் கிளியர் ஆகிவிடும் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
தற்போது, அதிமுக., தரப்பு மீது பாஜக., அதிருப்தியில் உள்ளது. அதிமுக., தனது செல்வாக்கை தவறவிட்டு விட்டது என்றும், அதிமுக.,வின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது என்றும் கருத்துகள் அலசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தச் செய்தி வேறு பரவலாக பகிரப் பட்டு அதிமுக.,வை காய்த்து எடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்!



