ஒற்றைத் தலைமை விவகாரத்தில், மற்றொரு எம்எல்ஏ.,வும் திடீர் கலகக் குரல் கொடுத்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி நேற்று மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஊடகங்களைச் சந்தித்து உள்ளக் குமுறலை வெளியிட்டார்.
அவரது கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனும் பேசியுள்ளார்.
குன்னம் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பேசிய போது ஒ.பன்னீர்செல்வம் தனது மகன் மத்திய அமைச்சராக வேண்டும் என்று செயல்பட்டது வருத்தம் அளிக்கிறது. கட்சிக்கு ஒற்றைத் தலைமையே வலு சேர்க்கும். அது ஆட்சிக்கும் வலு சேர்க்கும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அதிமுக தலைவர்களில் ஒருவரான ராஜன் செல்லப்பா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, ஒற்றைத் தலைமை அதிமுக.,வுக்கு வேண்டும் என்று பரபரப்பைக் கிளப்பினார். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, அதிமுகவின் தோல்வி குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் பேசினார். அப்போது ‘அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை! யார் கையில் அதிகாரம் உள்ளது என்றே தெரியவில்லை. ஜெயலலிதா போல் கழகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம்.” என்று கூறினார்.
அவரது பேச்சு அதிமுகவில் கோஷ்டிப் பூசல் உருவாகி இருப்பதை வெளிக் காட்டியது. இதனால் அதிமுக.,வில் சலசலப்புகள் எழுந்தன.
இதை அடுத்து, ராஜன் செல்லப்பாவின் இந்தப் பேச்சு குறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் கேட்டனர். அதற்கு அவர் ‘நான் இன்னும் அவரின் பேச்சைக் கேட்கவில்லை. இது கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதிமுகவில் கோஷ்டி பூசல் இருப்பதாகக் கூறுவது தவறான தகவல். எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும்தான் அவ்வாறு கூறி வருகின்றன.’ எனக் கூறினார்.
இந்நிலையில், ராஜன் செல்லப்பாவின் பேச்சுக்குப் பின்னே திமுக.,வும் ஸ்டாலினின் அரசியலும் இருப்பதாகவும், எப்படியாவது ஆளும் அதிமுக.,வைக் கலைக்க வேண்டும் என்றும், அதற்காக 50 எம்.எல்.ஏக்கள் வரை இழுக்கு வேண்டும் என்றும் திமுக., திட்டம் வகுத்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் உலவுகின்றன.