மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானது என்று உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புக் கொண்டதை அடுத்து, இத்தகைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது உயர் நீதிமன்றம்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி ஒப்புக் கொண்டது. கேள்வித்தாள் குளறுபடி, வெளிப்படைத்தன்மை இன்மை ஆகிய காரணங்களால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரி விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் பங்கேற்ற குரூப் 1 தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 9 ஆயிரத்து 50 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தேர்வானவர்களின் பெயர், பாலினம், பிரிவு என எவ்வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், கட் – ஆஃப் மதிப்பெண்ணும் வெளியிடப்படாததால் தேர்வு வெளிப்படைத்தன்மை இன்றி நடத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும், குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 18 கேள்விகள் தவறானவை என்றும், அவற்றை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று டி.என்.பி.எஸ்.சியிடம் தாம் கோரியதாகவும், ஆனால் அதனை ஏற்காமல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அந்த மனுவில் முறையிட்டுள்ளார்.
எனவே தேர்வு முடிவுகளை ரத்து செய்து, மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
விக்னேஷ் தாக்கல் செய்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கேள்வித்தாளில் அரசியலமைப்பு பாடப்பிரிவில் கேட்கப்பட்டிருந்த கேள்வி ஒன்றை சுட்டிக்காட்டி, இந்தக் கேள்விக்கு எனக்கே பதில் தெரியவில்லை என்றார்.
மேலும், இந்த ஒரு கேள்வியே மனுதாரரின் குற்றச் சாட்டுக்கு போதுமானதாக உள்ளது என்றார்.
அப்போது டி.என்.பி.எஸ்.சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், டிஎன்பிஎஸ்சியின் இந்த ஒப்புதல் விளக்கத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப் -1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது எனக் கூறினார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என்று தெரிவித்த நீதிபதி, ஜூன் 17 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டார்.