திருநெல்வேலி ஒட்டுமொத்தமாக காலி! அப்படித்தான் அமமுக.,வில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தின் புறநகர் வடக்கு, தெற்கு அமமுக மாவட்ட செயலாளர்களாக இருந்த பாப்புலர் முத்தையா, SSN சொக்கலிங்கம் ஆகியோர் ஏற்கனவே கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து விட்டனர்.
இந்த நிலையில் மீதம் இருந்த மாநகர் மாவட்ட செயலாளரான கல்லூர் வேலாயுதமும் இன்று அமமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.!
தென்மண்டல அமமுகவில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து விலகுவதற்கு மண்டல பொறுப்பாளரே காரணம் என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் கட்சித் தலைமை பிரச்னையை சரி செய்யும் என்ற எதிர்பார்ப்பில் கட்சியில் இருந்து விலகாமல் தொடர்ந்தனர் சிலர். அந்த நிர்வாகிகளுக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளிக்கும் விதமாக நேற்று டிடிவி தினகரன் ஒரு பேட்டி அளித்தார்.
“என்னுடைய உண்மையான தென்மண்டல தளபதி மாணிக்கராஜா மட்டும்தான்… மற்ற நிர்வாகிகள் விலகிச் செல்வதால் கவலை இல்லை” என்று டிடிவி தினகரன் நேற்று கூறியது, ஏதோ ஒரு நம்பிக்கையுடன் கட்சியில் தொடர்ந்து கொண்டிருந்த நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது. டிடிவி தினகரனே தங்களை விலகிச் செல்லுங்கள் என்று கூறுவதாகவே அவர்களுக்குத் தோன்றியுள்ளது.
‘தென் மண்டலத்தில் உள்ள அத்தனை நிர்வாகிகளும் விலகினாலும் கூட மண்டல பொறுப்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் கட்சித் தலைமையால் எடுக்க முடியாது’ என்று எழுப்பப்பட்ட விமர்சனங்களை உறுதி செய்வதாக டிடிவி தினகரனின் நேற்றைய பேட்டி அமைந்தது.!
இதன் மூலம் டிடிவி.,யின் நடவடிக்கையில் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மற்ற நிர்வாகிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதை அடுத்து, தாங்களும் புத்திசாலித்தனமான முடிவு எடுக்க வேண்டும் என்று தோன்றியதால் மீண்டும் விலகல் படலம் தொடங்கியுள்ளது!
திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த கல்லூர் வேலாயுதம், அமமுக.,வில் இருந்து சமீபத்தில் விலகி, வரும் 6 ஆம் தேதி அதிமுக.,வில் இணையத் தயாராக இருக்கும் இசக்கி சுப்பையா உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளுடன் ஒன்றாக இருக்கும் படம் இன்று காலையில் வெளியானது. இந்த நிலையில் மதியத்திற்கு மேல் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார்.