சென்னையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணகுமார். இவர் சென்னை செல்வதற்காக நேற்று மாலை புதுச்சேரி பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்தார். பின்னர், சென்னை செல்லும் ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தார்.
இருக்கையில் தனது மடிக்கணினியை வைத்துவிட்டு கீழே இறங்கினார். பின்னர், சிறிதுநேரம் கழித்து மீண்டும் பேருந்தில் தனது இருக்கைக்கு சென்ற போது மடிக்கணினியை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதேபோன்று மேலும் இருவர் தங்களது மடிக்கணினியைத் தேடிக்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து அவர்கள் மூன்று பேரும் பேருந்துநிலையம் முழுவதும் தேடியதில், சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் தான் மடிக்கணினியைத் திருடியது தெரியவந்தது.இதனையடுத்து, அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த செந்தில் என்பது தெரியவந்தது.
திருச்சியைச் சேர்ந்த தனது நண்பர்களான செல்வகுமார், முத்துக்குமார் ஆகியோருடன் சேர்ந்து தொடர்ந்து பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி மடிக்கணினிகளைத் திருடி வந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். பின்னர், அவரிடமிருந்து 6 லட்சம் மதிப்புள்ள 19 மடிக்கணினியைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், செந்திலின் நண்பர்களான செல்வகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.