இந்து மக்கள் கட்சியின் சார்பில், கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ஆறு பார்த்திபன் நேற்று மாலை சிக்கல் பகுதியில் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த வருடமும் அவர் இது போல கடுமையாக தாக்கப்பட்டார். தாக்கியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் கூட இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடந்த சில நாட்களாக சிக்கல் பொரவச்சேரி பகுதியை மையமாக வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம் அமைப்புகளும் தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கி, மத மோதல்களை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக கீழ்வேளூர் காவல் நிலையத்தில் . ஆறு .பார்த்திபன் புகார் அளித்ததன் பேரில் மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னையையொட்டி நடந்த சிறு கைகலப்புக்கு நான்கு இளைஞர்கள் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மத அடிப்படைவாத முஸ்லீம் அமைப்புகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிச இயக்கங்கள் திட்டமிட்ட ரீதியில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் இந்த பகுதியில் செயல்பட்டு வருகின்றன.
ஆறு பார்த்திபனை கொலை செய்யும் நோக்கத்தில் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென தங்களை வலியுறுத்தி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் … என்று கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.