
வாழைப்பூ பிரியாணி
தேவையான பொருட்கள்:
பெரிய வாழைப்பூ இதழ்கள் – 2 கைப்பிடி அளவு,
பெல்லாரி வெங்காயம் (நடுத்தர அளவு) – 4, தக்காளி – 3 (பெரியது),
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன்,
சீரகசம்பா அரிசி – 2 கப்,
பச்சை மிளகாய் – 4, புதினா, கொத்தமல்லித்தழை (இரண்டும் சேர்த்து) – ஒரு கைப்பிடி அளவு,
பட்டை – 2,
ஏலக்காய் – 2,
பிரியாணி இலை – 2,
தயிர் – அரை கப்,
பிரியாணி மசாலா – 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
சீரகசம்பா அரிசியைக் கழுவி தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். வாழைப்பூவுடன், தயிர், பிரியாணி மசாலா, இஞ்சி – பூண்டு விழுது, உப்பு, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய்களைச் சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் ஊறவிடவும். வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கிலும், புதினா, கொத்தமல்லித்தழை, தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக்கொள்ளவும். கடாயில் நெய், எண்ணெயைக் காயவைத்து, பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் சேர்க்கவும். வாசனைப் பொருள்கள் வதங்கியதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரையில் வதக்கவும். பிறகு தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினாவைப் போட்டு தக்காளி கரையும் வரையில் வதக்கவும். பின்னர் ஊறவைத்திருக்கும் வாழைப்பூவைப் போட்டு நெய் பிரியும் வரையில் சன்னமான தீயில் சுருள வதக்கவும். அரிசியில் தண்ணீரை வடித்துவிட்டு மசாலாவில் கலந்துவிடவும். 3 கப் தண்ணீர் ஊற்றி பிரஷர் குக்கரில் மிதமான தீயில் ஒரு விசில் வரும்வரை வைத்திருந்து பின்னர் தீயைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி, பிரஷர் அடங்கியவுடன் சூடாகப் பரிமாறவும்.