
பிரபல ஆன்மிகச் சொற்பொழிவாளர் சேலம் ருக்மிணி அம்மாள் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில்…
இந்து சமய ஆன்மீக சொற்பொழிவாளர் சேலம் ருக்மணி அம்மாள் காலமான செய்தி எனக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்தனை செய்கின்றேன்.
அவருடைய சொற்பொழிவுகள் என்றும் இந்து சமயத்தின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும். என்மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த பாசமும் அன்பும் காட்டியவர். அவரது மறைவு இந்து தமிழர்களுக்கு பேரிழப்பு!
சேலம் செல்வி. இரா. ருக்மணி M.A, M.A, M.A, B.Ed அவர்கள் 02.02.2020 காலை 6 மணி அளவில் காலமானார். அவரது தமிழ் மொழியின் மீதான காதல் அவரை வேறு எவர் மீதும் காதல் கொள்ள வைக்காமல் கன்னியாகவே தமிழ்த்தொண்டு செய்ய வைத்தது. ஆசிரியப் பணியே அறப் பணியாய் தன் வாழ்வை ஓர் ஓராசிரியர் பள்ளியில் தொடங்கியவர்.
படிப்படியாக உயர்ந்து உதவித்தலைமை ஆசிரியராய் நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்றார். தனது 22 ஆவது வயதில் சமயப் பேச்சாளராய் அறிமுகமாகி தன் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தார். கம்ப ராமாயணம் மற்றும் மகாபாரதம் இவை இரண்டிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்.
குறிப்பெதுவும் இன்றி காப்பியப் பாடல்களை மழையாய் பொழிபவர் என்று தமிழ் இலக்கிய ஜாம்பவான்களான கி.வா.ஜ, சா. கணேசன், திருமுருக கிருபானந்த வாரியார் மற்றும் பல தலை சிறந்த பேச்சாளர்களால் பாராட்டப்பட்டவர். உயர்ந்த கல்வியாளர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவர்களையும் தன் கம்பீரத்தமிழால் கட்டிப் போட்டவர்.
செஞ்சொற்கொண்டல், பாரதமணி சொல்லின் செல்வி போன்ற பட்டங்களும் பொற்றாமரை, மெகா மகளிர் போன்ற விருதுகளையும் தாய் தமிழ் தொண்டின் பயனாக அடைந்து பெருமை பெற்றவர்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பிரான்ஸ், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற மேலை நாடுகளிலும் சமயம் மற்றும் இலக்கியத் தொண்டாற்றிய தமிழ் கடல் தனது உடலை இவ்வுலகு அகற்றி புகழுடலொடு தமிழ் கூறும் நல் உலகில் நிலைத்து இருப்பார். அவர் நினைவுகள் என்றும் நம்மை விட்டு மறையாது. இந்து மக்கள் கட்சி சார்பில் எங்களது அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றோம்… என்று குறிப்பிட்டுள்ளார்.