
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் டிச.3ம் தேதி அன்று கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் தூணில் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
முன்னர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து ஆங்கிலேய அரசு அதைத் தடை செய்தது. அதனால், பிள்ளையார் கோவில் முன்புறம் உள்ள மோட்ச தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இன்று வரை வழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால், பிரிட்டிஷ் காலத்தில் முன்னிருந்த வழக்கத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், பின்னாளில் மாற்றப்பட்ட இந்த வழக்கத்தை முன்பு போல் மாற்றக்கோரியும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையில் டிச.3 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி, சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன். மலை உச்சியிலுள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாக தடை இல்லை. அந்த தீபத் தூண் தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் உள்ளது. பதிலாக மலையிலுள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது சட்டவிரோதம். தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் – என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அறநிலையத் துறை தரப்பு மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ‘பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்தூணில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. தவறான உள்நோக்கத்தில், ஆதாரம் இல்லாமல் மனுதாரர் மனு செய்துள்ளார்’ என வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு, பிறகு திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கே நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்தின் கருத்துகளைக் கேட்ட நீதிபதி, மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என தீர்ப்பில் தெரிவித்தார்.





