இலக்கிய நுகர்ச்சி: பிரிவு ஆற்றாமையின் படி நிலைகள்!

srirangan pattar - 2026 பிரிவாற்றாமை – 1 : ஆம்! பிரிவு ஆற்றாமை! இந்தச் சொல்தான் இலக்கியங்களில் என்னமாய்ப் புகுந்து விளையாடுகிறது? கவிஞர்களாயினும் சரி.. கற்பனாவாதிகளாயினும் சரி… உள்ளம் உருக்கும் வார்த்தை நயத்தைத் தம் இலக்கியப் படைப்பில் என்னமாய் வெளிக்காட்டி விடுகிறார்கள்..!!

மனத்துக்குப் பிடித்த யாராயினும் உடனேயே இருக்கும் போது தோன்றும் உள்ளக் கிளர்ச்சியும், அவர்களைப் பிரிந்து வாடும்போது வருத்தும் உள்ள மெலிவையும், அன்பும் ஈரமும் உள்ளத்தில் உள்ள எவராயினும் சரி… அனுபவித்திருப்போம்!~

***
இலக்கியமும் அப்படியே! காதலனைப் பிரிந்து தாபத்தால் மெலிந்துபோன காதலியையும், காதல் நிலையையும் காட்டும் பாடல்கள் நமக்குப் புதிதல்ல… அறமும் பொருளும் படைத்துக் காட்டிய வள்ளுவப் பேராசான், இன்பத்தை இறுதியில் வைத்து, உள்ளத்தின் தன்மையைக் காட்டுகிறார்.

“பிரிவாற்றாமை’ என்பதை வைத்து, “உறுப்பு நலன் அழிதல்’ என்று ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார்…

கைவளைகள் இசைபாடும் கரங்களுக்கும் உடல் மெலிந்தால் தோன்றும் நிலைக்கும்தான் எத்தனை எத்தனை குறள்கள்… கவிதைகள்!

“துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை’ (குறள்: 1157)

தலைவன் அவளை விட்டுப் பிரிந்ததால் ஏற்பட்ட பிரிவுத் துயரில் அவள் கை மெலிந்தது. கை மெலிவு கண்டதால், அவள் கைகளில் அணிந்திருந்த வளையல்கள் கைகளை விட்டுக் கழன்று விழுந்தன. இது இவளது பிரிவாற்றாமையைப் பலர் அறியப் பறைசாற்றுவதுபோல் உள்ளது என்பதாக ஒரு காதல் காட்சியைக் காட்டுகிறார் வள்ளுவர்.

***
மெலிவு காணல் மகளிர்க்கு மட்டுமேயானதா என்ன? தலைமகனுக்கு உரித்தாய் இல்லையோ?

ஏன் இல்லை?

4 வருடம் முன் ஆசையாய் வாங்கி உடலொடு ஒட்டிக் கொண்டு கம்பீரமாய்ப் போட்ட சொக்காய், இன்று… காற்றின் வேகத்தில் சடசடத்து உடலுக்கும் அதற்குமான இடைவெளியை ஒரு மடங்கு கூட்டிக் காட்டி கொடியாய்ப் பறந்தது!

ravivarma painting1 - 2026

(படம்: ரவிவர்மா -வின் தமயந்தி )

கொஞ்சம் இலக்கிய நுகர்ச்சி :: பிரிவாற்றாமை… (2)

பிரிவாற்றாமை எனும்போது, நம் சங்க கால அக இலக்கியங்களில் பொருள்வயிற் பிரிந்த தலைவனின் நினைவால் வாடும் தலைவியைப் பற்றிய பாடல்கள் நிறையவே உண்டு. கார் காலத்தின் கரு மேகங்கள் திரளும் முன்பே காதலன் தன் கடமை முடிந்து, காத்திருக்கும் தன் கரங்களைக் கைப்பற்றக் கடுகி வருவேன் என்றுரைத்தானே எனப் புலம்பும் காதலியர்தான் எத்தனை எத்தனையோ!?

பொருள் வயிற் பிரிந்து சென்று, மீண்டு வரும் காதலனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காதலியரைப் போல் அன்றி, இங்கே அதற்கு முன்னதாக ஒரு காட்சியைக் காட்டுகிறார் ஒரு கவிஞர். இந்தக் காதலன் தன் காதலியைப் பிரிந்து செல்லும் முன்னரே, அவள் உடல் நலிவைக் கனவிற் கண்டு, அவளை எப்படி சமாதானம் செய்கிறான் என்ற காட்சியை ரசித்துப் பார்ப்போம்..!

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

இது ஒரு சம்ஸ்கிருதக் கவி. கவிஞரின் சிந்தனை காலச் சக்கரத்தின் பாற் பட்டு வேகமாகச் சுற்றுகிறது.

கவிதை இதுதான்…
“யாமி நயாமீதி தவே வததி புரஸ்தாத் க்ஷணேந தந்வங்க்யா;
களிதாநி புரோவலயாநி அபராணி புநஸ் ததைவ தளிநாநி..” – என்று தொடரும் இந்தக் கவிதையின் பிரிவாற்றாமை குறித்த சொல் நயத்தைப் படித்தது விரித்துச் சொல்கிறேன்.

பிரிவுத் துயரை சகித்துக் கொள்ள இயலாத ஒரு உத்தம குணம் கொண்ட தலைவி இவள்.

தலைவியை விட்டுவிட்டு, பொருள் தேடுதல் பொருட்டு வேறு நகரத்துக்குச் செல்ல எண்ணினான் தலைவன்.

அவன் தலைவியிடம் வந்து, ‘யாமி’ (செல்கிறேன்) என்றான். ‘வெளியூர் செல்கிறேன்’ என்ற அந்தச் சொல்லைக் காதில் கேட்ட உடனேயே, தலைவியின் கைகளில் அணிந்திருந்த வளைகள் கழலத் தொடங்கின. பாதிவளைகள் கழன்று விழுந்துவிட்டன. வெளியூர் செல்கிறேன் என்று அவன் சொன்ன சொல்லைக் கேட்டதற்கே, அவள் உடல் அப்படி இளைத்துப் போயினள் என்பதை கவி புலப்படுத்துகிறார்.

உடல் மெலிந்தால் வளை கழலுமல்லவா?

இதைக் கண்ட தலைவன், இவள் நம் பிரிவைத் தாங்கமாட்டாள் என்று உணர்ந்தான். எனவே, அவளை மனம் மாற்ற எண்ணி, உடனேயே… ‘நயாமி’ என்றான்.

இந்தச் சொல்லுக்கு இரு பொருள் கொள்வர் பெரியோர். ‘ந-யாமி’ என்று இரு பதங்களாக்கிப் பொருள் கொண்டால், ‘போவதில்லை’… அதாவது, “உன்னை விட்டுவிட்டு நான் போகப் போவதில்லை’ என்ற பொருளைத் தரும். ‘நயாமி’ என்ற ஒரு பதமாக்கிப் பொருள் கண்டால், ‘உன்னுடன் செல்கிறேன்…’ அதாவது, “ஒருவேளை நான் போவதாயிருந்தால் உன்னை விட்டுவிட்டுத் தனியே போகமாட்டேன்; உன்னையும் உடனழைத்துப் போவேன்’ என்று பொருள்படும்.

இந்தக் காரணத்தாலேயே, கவி இங்கே, ‘ந-கச்சாமி’ (போகப் போவதில்லை) என்கிற சொல்லைப் போடாமல் “ந-யாமி’ என்ற பதத்தைக் கையாள்கிறார்.

தலைவன் தன் வாய்திறந்து, இங்கனம் மொழிந்ததைக் கேட்ட நொடிப் பொழுதில், தலைவியின் கைகளில் இருந்த மீதமுள்ள வளையல்கள் ‘படீல் படீல்’ என வெடித்துத் தெறித்தனவாம்.

அப்படி என்றால், தலைவியின் மனதுக்குக் குதூகலம் தரும் வகையிலான ‘ந-யாமி’ என்ற சொல்லைக் கேட்ட அந்நொடிப்பொழுதே, அவள் உடல் மகிழ்ச்சியால் பூரித்துப் போனது. உடல் பருத்துப் பூரித்ததால் கைவளைகள் அந்த நெருக்கம் தாங்காமல் வெடித்துச் சிதறின.

இப்படியொரு வித்தியாசமான சிந்தனையைக் கவி தருகிறார்.painting1 - 2026

நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் பிரிவாற்றாமை குறித்த பாசுரங்கள் மிக அதிகம். பெருமானை நினைந்து கதறும் கோதை நாச்சியார், தம் திருமொழியில், எழிலுடைய அம்மனையீர் பாசுரத்தில், ‘என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினரே’ என்கிறார். அதாவது, என்னுடைய கை வளைகள் தாமேயாகக் கழன்று விழுதல் பொருட்டு, ஆக்கினரே என கண்ணனை நினைந்து கதறுகிறாள். இங்கனம், உடல் மெலிதல் பற்றிய குறிப்பு வருகிறது. அதுபோல், ‘என் அங்கம் மெலிய வளை கழல…’ என்றும் உடல் மெலிதல் குறிப்பு உண்டு. நம்மாழ்வார் காட்டும் பராங்குச நாயகியின் கதறல் நம்மை உண்மையில் கண்ணன் கழலினை நண்ணச் செய்துவிடும்தான்! பிரிவாற்றாமை – 1ல் துறைவன் துறந்தமை தூற்றாகொல் என்ற திருக்குறளின் கருத்தில் உடன் அமைந்ததுதான் இந்தப் பிரபந்தப் பாசுரக் கருத்துகளும்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

ஆயின், உடல் மெலிதலைப் பேசியது போல், உடல் பூரித்துப் போனமை குறித்துப் பேசும் ஒரு வைணவக் கருத்தும் உண்டு. அது, ஸ்வாமி பராசர பட்டரின் குணரத்னகோசத்தில் காட்டப் படுவது.

அது என்ன?

கொஞ்சம் இலக்கிய நுகர்ச்சி :: பிரிவாற்றாமை… (3)

காதல் அனுபவத்திற் தொடங்கி, இறையனுபவத்தில் முடித்தல் நும் சிறப்பு என்று நம் நண்பர் இங்கே சொன்னபடி, காதற் பிரிவு ஆற்றாமையிற் தொடங்கி, இங்கே நம் இறை நம்பெருமாளில் முடிக்கிறேன்; முடித்து வைக்கிறேன்.

நம் எதிராச ராமானுச மகாமுனிக்குப் பின்னே வைணவம் வளர்த்த பராசர பட்டர் தம்முடைய குணரத்ன கோசத்தில் அரங்கநாயகித் தாயின் புகழைப் பாடும்போது அருமையான ஒரு காட்சியைக் காட்டுகிறார். இதன் பொருளை விரித்துரைத்தலில், இரு கலையார் சம்ப்ரதாய பேதங்கள் உண்டு… ஸ்ரீதேசிக ஸ்வாமியின் வியாக்யானத்தை ஒட்டி! நான் இந்த பேதங்களுக்குள் புகாமல், இலக்கிய நோக்கில் வெளிப்படைப் பொருளைக் கொண்டு இங்கே விவரிக்கிறேன்.

மெலிதலிற் தொடங்கி, மகிழ்ச்சியில் உடல் பூரித்துப் போனதில் நிறுத்தினோம். விரக தாபம் வெளித்தெரிய கைவளைகள் கழன்று விழுந்ததாய் மெலிதற் குறிப்பு தந்த கவிகள், தாபம் தணிந்து உடல் பூரித்தமையின் வளைகள் படீலென வெடித்துத் தெறித்த காட்சியையும் காட்டி நின்றனர்.

இங்கே தாபங்கள் இல்லைதான். ஆனால், உடல் மெலிதலும் உடல் பூரித்துப் பருத்தலும் மகளிருக்கேயான பொதுமையா என பிரிவாற்றாமை-1ல் என் கருத்தை விதைத்தேன்.

மகளிருக்கு மட்டுமல்ல; தலைவனுக்கும் உரித்தானதே என கவி உரைக்கின்றார். அது எங்கனே என்னில்,

ஸ்ரீபராசரபட்டரின் குணரத்னகோசம் (9)ல்

ச்ரிய:ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய! தவ ச ஹ்ருத்யாம் பகவதீம்
ச்ரியம் த்வத்தோப்யுச்சைர் வயமிஹ பணாம: ச்ருணுதராம் |
த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ச்ரவணத:
புநர்ஹர்ஷோத்கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுகசதம் ||

(ச்ரியஸ்ரீ: ஸ்ரீரங்கேசய) திருவிற்கும் திருவே; ஸ்ரீரங்கநாதனே… என்று பட்டர் விளிக்கிறார்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

அழைத்த குரலுக்கு அரங்கன் செவிமடுத்து, என்ன சொல்லப் போகிறாரோ இவர் என்ற ஆவலில் கேட்கத் தயாராகிறார்.

அப்போது பட்டர் சொல்லுகிறார்… “அடியேன் பாடப் போகிறேன்…’ என்றார்.

அரங்கனோ, சரிதான்.. பட்டர் தம்மைத்தான் பாடப் போகிறார் என்ற ஆவலில் அவரை நோக்க, பட்டரோ “இல்லை இல்லை; உம்மைப் பாடவில்லை; அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பனான உம் இதயத்தில் வாசம் செய்யும் பிராட்டியைப் பாடப் போகின்றேன்;

உம்மைப் பாடுதலை நீர் உம் காதால் கேட்பதைக் காட்டிலும், உம் திருவாகிய ஸ்ரீயைப் பாடுதலைக் காதால் கேட்பது உமக்கு அதிக மகிழ்ச்சியைத் தருமே! எனவே உம் இதயத்துள் உறை பிராட்டியைப் பாடப் போகின்றேன். என் வாயிலிருந்து வார்த்தைகள் இடைவிடாது வந்து கொண்டேயிருக்கும் (பணாம:)

அவற்றை நீர் வெறுமனே கேட்டுக் கொண்டிராமல், உன்னிப்பாக ஈர்ப்போடு ஆச்சர்யமாகக் கேட்க வேண்டும் (ச்ருணுதராம்)….

பிராட்டியின் பெருமைகளைக் காதால் கேட்கின்றபோது உம் கண்கள் ஆச்சர்யத்தால் விரிய வேண்டும்… (த்ருசௌதே பூயாஸ்தாம்)

நீண்ட அப்பெரியவாய கண்கள் எனைப் பேதைமை செய்தனவே என்று ஆழ்வார் பாடியதைப் போன்ற உம் அகல விரிந்த கண்கள் உம் காதுகள் வரை நீண்டு பரந்து விரிய வேண்டும். (ஸுகதரள தாரே ச்ரவணத:)

புநர் ஹர்ஷோத் கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுகசதம் – மேலும் உம் நெஞ்சு பெருமிதத்தால் விம்மிப் புடைக்க வேண்டும். அப்படி புஜங்கள் பெருத்துப் புடைக்கும்போது உம் மார்பில் அணிந்துள்ள கவசம் படீல் படீல் என விண்டு தெறிக்க வேண்டும்.

இப்படி நூறு முறை நீர் உம் கவசத்தை மாற்ற வேண்டும்…”

– என்று கோருகிறார் ஸ்ரீபட்டர்.

இங்கே திருவரங்கத் தலைவி அரங்கநாயகியின் புகழ்மாலையைக் கேட்ட மாத்திரத்தில் அரங்கத் தலைவனின் நெஞ்சு பெருமிதத்தில் விம்மிப் புடைத்து கவசம் தெறித்து விழுகிறது; தலைவியின் புகழைக் காதிற் கேட்டதும் தலைவனின் உடல் பூரிப்படைகிறது.

அதனால்தான்… நாம் திவ்ய தம்பதியை நெஞ்சில் ஏற்றி நித்தமும் நிலை நிறுத்துகிறோம்! இங்கே இவர்களுக்கு பிரிவாற்றாமை ஏதுமில்லை; பிரிவே இல்லை எனும்போது!

கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories