பாரதியாரின் கண்ணன் பாட்டு
பகுதி – 24, கண்ணன் – என் விளையாட்டுப்பிள்ளை
கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை பாடல் நகேதாரம் இராகத்தில் கண்டஜாதி ஏகதாளத்தில் பாரதியாரால் எழுதப்பட்டுள்ளது. இதன் இரசங்கள் அற்புதம் மற்றும் சிருங்காரம் என பாரதியார் குறிப்பிட்டுள்ளோர். இனிப் பாடலைக் காண்போம்.
தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. … (தீராத)
1. தின்னப் பழங்கொண்டு தருவான்; – பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் – அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். … (தீராத)
2. தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் – சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; … (தீராத)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே – என்னை
அழஅழச் செய்துபின், ”கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” – என்பான் – என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். … (தீராத)
4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; – தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வண்ணப் புதுச்சேலை தனிலே – புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். … (தீராத)
5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; – அமுது
பொங்கித் ததும்புநற் பீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே – அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். … (தீராத)
6. அங்காந் திருக்கும்வாய் தனிலே – கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? – கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? … (தீராத)
7. விளையாட வாவென் றழைப்பான்; – வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; – எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். … (தீராத)
8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! – மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் – வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். … (தீராத)
9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்; – பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் – தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். … (தீராத) இப்பாடலின் பொருளை இப்போது காணலாம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சொல்வார்கள். தெய்வத்தை மகாகவி பாரதி, அதுவும் அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்த அந்த ஆயர்பாடிக் கண்ணனை சற்றே வளர்ந்த குழந்தையாக பாவித்து இப்பாடலை எழுதியிருக்கிறார். தந்தையாக, ஆசானாக, சீடனாக, சிறு பெண் கண்ணம்மாவாக, சேவகனாகப் பார்த்தது ஒருபுறம் இருக்க, இன்று அவனை ஒரு குறும்புக்கார சிறுவனாக சித்தரிக்கிறார். இதனை ஒரு சிறுகதை வடிவில் தர நான் முயற்சிக்கிறேன்.