பாரதியாரின் கண்ணன் பாட்டு– பகுதி – 27
கண்ணன் என் காதலன் 1
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கண்ணன் என் காதலன் என்ற தலைப்பில் பாரதியார் மொத்தம் ஆறு பாடல்கள் புனைந்துள்ளார். கண்ணனை நாயகனாய் உருவகித்து எழுதப்பட்ட பாடல்கள் இவை. கடைசிப் பாடல் கண்ணன் என் காந்தன் என்ற தலைப்பில் உள்ளது. இனி ஆறு பாடல்களில் முதல் பாடலைக் காணலாம். இப்பாடல் மிகவும் எளிய பாடல், எனவே தனியாகப் பொருள் தேவையில்லை. இருப்பினும் பாடலின் இறுதியில் விளக்கத்தைப் பார்க்கலாம். இந்தப் பாடலை பாரதியார் செஞ்சுருட்டி இராகத்திலும், திஸ்ர ஏக தாளத்திலும் புனைந்துள்ளார். பாடலின் இரசம் சிருங்கார ரசம் ஆகும். இனி பாடல்.
தூண்டிற் புழுவினைப்போல் – வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக – எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் – தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் – மனது
வெறுத்து விட்டதடீ! . … 1
பாயின் மிசை நானும் – தனியே
படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் – சகியே!
சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் – சகியே!
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன்; – சகியே!
நுங்க ளுறவை யெல் லாம். … 2
உணவு செல்லவில்லை; – சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; – சகியே!
மலர் பிடிக்க வில்லை;
குண முறுதி யில்லை; – எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உளத்திலே – சுகமே
காணக் கிடைத்ததில்லை. … 3
பாலுங் கசந்தடீ தடீ! – சகியே!
படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் – செவியில்
குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் – இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் – கிரகம்
படுத்து மென்று விட்டான். … 4
கனவு கண்டதிலே – ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை – எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; – சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே – புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ! . … 5
உச்சி குளிர்ந்ததடீ! – சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் – முன்னைப்போல்
மனத்துக் கொத்தடீ!
இச்சை பிறந்ததடீ! – எதிலும்
இன்பம் விளைளந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! – சகியே!
அழகு வந்ததடீ! … 6
எண்ணும் பொழுதி லெல்லாம் – அவன்கை
இட்ட விடத்தினிலே!
தண்ணென் றிருந்ததடீ! – புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; – அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் – அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ! … .7