பெரம்பலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய தமுமுக பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பஸ் நிலையம் அருகே தமுமுக.,வின் கொள்கை பிரசாரம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான கண்டனக் கூட்டம் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு இஸ்லாமியர்களை பழிவாங்கும் நோக்குடன் அமல்படுத்தியுள்ள முத்தலாக் தடை சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவு நீக்கம், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் படுகொலை உள்ளிட்டவற்றைக் கண்டித்து இந்த தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்ததாகக் கூறப் பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமுமுக., அமைப்பின் தலைமைக்கழக பேச்சாளர் எம். முகமது ஷெரீப்பின் பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலானது.
முன்னர் வந்த செய்தி… மோடி, அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல்
அந்த வீடியோ பதிவில்….
எங்களது கொள்கை எதிரி பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸும்! இவர்களால் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் நாட்டின் மற்றவர்களும் பாதிக்கப் படுகின்றனர். நாங்கள் அவர்களுக்காகவும் சேர்த்து தான் பேசுகிறோம். முஸ்லிம்களுக்காக மட்டும் பேசுவதாக இருந்தால் முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்த உடனேயே பிரதமர் மோடியின் தலையை எடுத்திருப்போம். உள்துறை அமைச்சர் அமித்ஷா உயிரோடு இருந்திருக்க மாட்டார். இந்த நேரம் நாடாளுமன்றம் நாடாளுமன்றமாக இருந்திருக்காது.
இந்தப் பிரசாரக் கூட்டத்தில் இருக்கும் உளவுத்துறையினர் நன்றாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்… என்று பேசிக் கொண்டு போகிறார்.
ஆனால், இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்து, கடும் மனக்கொதிப்புக்கு ஆளான பலரும் இதனைப் பகிர்ந்து கொண்டு, தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் சிலர், இந்த வீடியோவில் கூறப்பட்ட விஷமத் தனத்தையும், கொலை மிரட்டல் விடுக்கும் பயங்கரவாத நச்சுக் கருத்துகளையும் குறிப்பிட்டு, போலீசில் புகார் அளித்தனர்.
இந்த வீடியோ சமூகத் தளங்களில் வைரலான நிலையில், காவல் துறை உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உளவுத் துறை போலீசாருக்கே குறிப்புகள் கொடுத்து, சவால் விட்டுப் பேசிய செயல் உளவுத் துறை போலீஸாருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
இதை அடுத்து, கூட்டம் நடந்த மங்களமேடு போலீசாரிடம் இருந்தும், பெரம்பலூர் மாவட்ட உளவுத்துறை போலீசாரிடம் இருந்தும் இந்த நிகழ்ச்சியின் முழு வீடியோவும் கேட்டுப் பெற்றது காவல் துறை தலைமையகம்! பின்னர் அதனை முழுமையாக ஆய்வு செய்த போது, கடும் அதிர்ச்சி அடைந்த போலீஸார், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அதில் மத உணர்வை தூண்டும் வகையிலும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் ஷெரிப் பேசியது தெரிந்தது. இதை அடுத்து திருச்சியைச் சேர்ந்த முகமது ஷெரீப்பை கைது செய்ய கட்டளை பறந்தது. .
இந்நிலையில், இன்று காலை திருச்சியில் உள்ள ஷெரீஃபின் வீட்டுக்குச் சென்ற டி.எஸ்.பி. தேவராஜன் தலைமையிலான போலீசார், அவரைக் கைது செய்து, விசாரணைக்காக மங்களமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஷெரீஃப் மீது கொலை மிரட்டல், மத உணர்வை தூண்டும் வகையில் பேசுதல், பிரிவினைவாதத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது.
முகமத் ஷெரீஃப் பேசியதன் காணொளி…