மணல் கடத்தல் குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணன் ஊரைச் சேர்ந்த பிரபு. 33 வயதான இவர் அந்த பகுதியில் திமுக இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார்.
இவர் கண்ணனூர் பகுதியில் உள்ள ஆற்றில் 10 ஆண்டுகளாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு போலீசாரும் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபு தன் தந்தைக்குச் சொந்தமான நிலத்தில் மணல் பதுக்கி வைத்திருந்ததை முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன் கண்டறிந்து பறிமுதல் செய்தார். ஆனால் பிரபுவை கைது செய்யவில்லை!
இந்நிலையில், நேற்று முன்தினம் மருக்கலாம்பட்டியைச் சேர்ந்த விநாயக மூர்த்தி என்பவர் துறையூரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த பிரபு, விநாயக மூர்த்தியை பார்த்து நான் மணல் கடத்தி வைத்திருந்ததை அதிகாரிகளிடம் கூறிய உன்னை சும்மா விடமாட்டேன் குடும்பத்தோடு முடித்து விடுவேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்!
இதனால் அதிர்ச்சி அடைந்த விநாயகமூர்த்தி துறையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்!