சென்னை அம்பத்தூர் அருகே உள்ள பட்டரவாக்கம் என்ற பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவருக்கு ராஜஸ்ரீ என்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.
ராஜஸ்ரீக்கு காதுப் பகுதியில் தோடு போடும் இடத்தில் சிறுகட்டி இருந்துள்ளது. அதனால் ராஜஸ்ரீயின் பெற்றோர்கள் அவரை அரசு உதவிபெறும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். உடனே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் நேற்று ராஜஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவ சோதனைகள் முடிவடைந்த நிலையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் அலட்சியத்தால் காதுக்கு பதிலாக சிறுமியின் தொண்டையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் ஒருவனுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை மாற்றி செய்துவிட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்ட காரணம் இன்னும் அதிர்ச்சியையளிக்கிறது..
இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவதாக மருத்துவமனை கூறியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.