
இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று, மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சிறுவனின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார். மாஞ்சாவால் இனியும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்று அவர் தன் மனவருத்தத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமித்ரா மற்றும் ஒரே மகன் அபிநவ் ஷராப்.
கோபால் தனது மகன் மற்றும் மனைவியுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் எவரோ பட்டம் விட்டு அப்படியே விட்டுப் போயிருந்த மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயதுக் குழந்தை அபிநவ் உயிரிழந்தான்.
மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டம் விட்டதில் சென்னையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பட்டம் விட்ட கொருக்குப்பேட்டை நாகராஜ் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தை அபிநவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. பின் அபிநவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் உடலைக் கண்டு குழந்தையின் உறவினர்கள் கதறி அழுதனர்.
தன் குழந்தை மரணம் குறித்து கோபால் கூறிய போது… “வெளியில் கூட்டிக் கொண்டு செல்லலாமே என்று தான் அவனை பைக் முன்புறம் வழக்கம் போல் அமர வைத்து சென்று கொண்டிருந்தேன். நான் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை. எங்கிருந்தோ அறுந்து வந்த மாஞ்சா கயிறு என் மகன் உயிரைப் பறித்துவிட்டது.

என் கண் முன்னேயே நடந்த இந்தச் சம்பவத்தை பார்க்க வேண்டிய கொடுமை… நினைத்துப் பார்த்தால் மனம் கனக்கிறது. என் கண் முன்னே துடித்த என் மகனைக் காப்பாற்ற முடியாமல் துடித்தேன்… அப்படியே என் உயிரும் சேர்ந்து போய்விடக் கூடாதா என்றுதான் நினைத்தேன்.
நாங்கள் தவமிருருந்து பெற்ற ஒரே மகன். அபிநவ் விளையாடுவதை மணிக் கணக்காக அமர்ந்து ரசிப்போம். சுட்டித்தனம் நிறைய. அவன் தான் எங்கள் உலகமாக இருந்தான். அவன் இல்லாத நாளை இனி எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
இதுவே கடைசி சம்பவமாக இருக்கட்டும். இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. எந்தப் பெற்றோருக்கும் இதுபோல் நடக்கக் கூடாது. அதற்கான முயற்சியை போலீஸ் எடுக்கும் என்று நம்புகிறோம்” என கதறி அழுதார்.



