குவைத் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்த பயணி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
குவைத்தில் இருந்து நேற்று முன்தினம் 287 பயணிகளுடன் குவைத் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.
இந்த விமானமானது வழக்கம்போல அதிகாலை 1.30 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டும். இந்த நிலையில் நள்ளிரவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த திருப்பதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலு பாலாஜி (46) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
அவர் உடனே விமான பணிப் பெண்களின் உதவியை நாடினார். இதையடுத்து உடனே அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் விமானிக்கு தகவல் கூறினர். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கமான நேரத்துக்கு ஒருமணிநேரம் முன்பாகவே விமானத்தை இயக்கி வர உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாலை 12.30 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. மருத்துவ குழுவினர் பயணிக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருந்தனர்.
விமானம் தரையிறங்கி நின்றதும் உடனடியாக அவர்கள் விமானத்திற்குள் ஏறி ஸ்ரீனிவாசலு பாலாஜியை பரிசோதித்தனர். ஆனால் துரதிஷ்வசமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இது குறித்து விமான நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஸ்ரீனிவாசலு பாலாஜியின் உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். விமானத்தில் பயணி யாராவது இறந்தால் விமானத்தை முழுமையாக சுத்தம் செய்த பிறகே இயக்கப்படும்.
அதன்படி விமானம் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் அதிகாலை 2.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக அதிகாலை 5 மணிக்கு குவைத்துக்கு புறப்பட்டு சென்றது.