கோவை அருகே கள்ளக்காதலனுடன் வாழ ஆசைப்பட்ட மனைவி, அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மணியக்காரன்பாளையம் பகுதியில் வெல்டர் குமார் – சங்கீதா தம்பதி மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
குமாருக்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே சங்கீதாவுக்கு அவரது வீட்டிற்கு பால் ஊற்ற வரும் பிரபு என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாற, இருவரும் செல்போன் மூலம்பேசி தங்களது காதலை வளர்த்துள்ளனர். மேலும், அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த சங்கீதா, தனது குழத்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கணவர் குமார் பலமுறை சேர்ந்து வாழ சங்கீதாவை அழைத்தும், அவர் வர மறுத்து விட்டார்.
எனினும், கள்ளக்காதலன் பிரபுவுடன் தன் உறவை தொடர்ந்த சங்கீதா, வெளியிடங்களுக்கு சென்று பொழுதை கழித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தங்களுடைய கள்ளகாதலுக்கு இடையூறாக உள்ள கணவர் குமாரை கொலை செய்ய சங்கீதாவும், பிரபுவும் திட்டம் தீட்டியுள்ளனர்.
குமார் தனது வீட்டில் போதையில் தூங்கிக் கொண்டிருந்ததை அறிந்து அங்கு சென்ற பிரபுவும் சங்கீதாவும், குமாரின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். இதில் காயமடைந்த குமார் அவர்களை தள்ளி விட்டுவிட்டு வீட்டில் இருந்து வெளியில் தப்பி ஓடி வந்தார்.
குமாரின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினர், ரத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த சரவணம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தப்பி சென்ற சங்கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.