சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 84 வயது மூதாட்டி குணமடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்து வீடு இன்று மதியம் திரும்பினார். இவருடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் பூரண குணம் அடைந்தனர்.
அவர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நோய் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மூன்று பேரும் இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்கள்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 84 வயது மூதாட்டி, 54 வயது பெண் மற்றும் 25 வயது இளைஞர் ஆகியோர் அடங்குவர்.
இவர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் பலனாக மூவரும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா பாதித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது மூதாட்டி, குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 84 வயது மூதாட்டியும் குணமடைந்திருப்பது மருத்துவர்களுக்கும், கொரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.