
சென்னை:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு மழை கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரத்தில் 7 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி சாதனை புரிந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. தாம்பரம், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், அண்ணாநகர், மணலி, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி என சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளிலும், புற நகர்ப் பகுதிகளிலும் கன மழை பெய்தது. பத்து நிமிடங்களில் 4 செ.மீ மழை பொழிந்தது. வானத்திலிருந்து தண்ணீர் கொட்டியது போல் மழைப் பொழிவினை மக்கள் உணர்ந்தனர். சுமார் ஒரு மணி நேரத்தில் 7 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் அதிக அளவில் தேங்கி நின்றது.
இந்த வருடத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழைப் பொழிவு நேற்று பெய்த மழைதான்! சென்னையின் முக்கியப் பகுதிகளான அண்ணாசாலை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளம் தேங்கி நின்றதால் வாகனங்கள் மிதந்து சென்றன. மழை நின்றதும் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்றதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுரங்கப் பாதைகளில் வெள்ளநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
மழை பெய்யத் தொடங்கிய போதே கே.கே.நகர், அசோக் பில்லர், வடபழனி, கிண்டி உள்ளிட்ட நகரின் தாழ்வான இடங்களிலும் முக்கிய இடங்களிலும் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின் விநியோகம் நிறுத்தப் பட்டது.
இதனிடையே, சென்னை பிராட்வே பகுதியில், மழையில் நடந்து சென்றபோது அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மீத்துகுமார் சிங் என்ற நபர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.


