சென்னை :
நஷ்டத்தின் இயங்கி வரும் போக்குவரத்துத் துறையில் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க, பஸ் கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் இப்போது, விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், திருநெல்வேலி, கோவை என 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், நீண்ட தூர பேருந்து சேவைக்கான அரசு விரைவு போக்குவரத்து கழகம் இவை இரண்டும் தனித்தனியாக செயல்படுகின்றன.
தமிழக அரசின் இந்த போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 22 ஆயிரத்து 203 பஸ்கள் ஓடுகின்றன. தமிழ்நாட்டில் தினமும் இரண்டு கோடி பேர் பேருந்து சேவையை பயன்படுத்துகிறார்கள். எளியவர்களின் போக்குவரத்துக்கு உதவியாய் இருப்பதால், போக்குவரத்து துறை பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தாலும் பேருந்து கட்டணம் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பேருந்து கட்டணம் கேரளா, கர்நாடகா, ஆந்திராவை விட 40 சதவிகிதத்திற்கும் குறைவுதான். முன்னர் தமிழக போக்குவரத்து துறை கடும் நெருக்கடியை சந்தித்த போது, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினார். இதற்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. பேருந்து கட்டணத்தை உயர்த்தியும் போக்குவரத்துத் துறையை நஷ்டத்தில் இருந்து மீட்க முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் வாங்கிய கடன் தொகையே இப்போது ரூ 2400 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், போக்குவரத்துக் கழக பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க வேண்டிய தொகை மட்டும் ரூ.1500 கோடி நிலுவையில் உள்ளது.
கடன்களை அடைத்து, இந்த நிலுவைத் தொகையை எப்போது கொடுக்க முடியுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்து வரும் 28ஆம் தேதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் வேலைநிறுத்தம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு பஸ் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி சாதாரண பஸ்களில் கிலோ மீட்டருக்கு வசூலிக்கப்படும் தொகை 42 காசில் இருந்து 60 காசாக உயரக் கூடும். எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 56 காசில் இருந்து 73 காசாக உயரலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் கட்டணம் 60 பைசாவில் இருந்து 75 காசாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களின் கட்டணம் கிலோ மீட்டருக்கு 70 பைசாவில் இருந்து 95 பைசாவாகவும் உயர உள்ளது.
குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களின் கட்டணமும் உயர்த்தப்பட உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் தற்போது குறைந்தபட்ச கட்டணம் மூன்று ரூபாயாக உள்ளது. இந்த கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்த முடிவு செய்துள்ளனர். வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பஸ்களின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயரும். அதிகபட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது.