மதுரையில் பெற்றோர்களிடம் சண்டையிட்டு வெளியூருக்கு வேலை தேடி வந்த இளம்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் உள்ள வீட்டில் விபச்சாரத் தொழில் நடைபெறுவதாக ரோந்து பணியில் ஈடுபட்ட மதுரை எஸ்எஸ் காலனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியுடன், குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு போலீசார் வாடிக்கையாளர் போன்று சென்றுள்ளனர்.
அப்போது, அந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்கிருந்த ராணி (எ) அழகம்மாள், ரைமான்பீவி, ராமசாமி, ரமேஷ், நிசாந்த் ஆகிய 5 பேர் கொண்ட கும்பலை சம்பவ இடத்திலேயே கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அந்த கும்பலை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், 20 வயது பெண் ஒருவரை அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. ஜோதி (20) என்ற அந்த பெண் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பெற்றோர்களிடம் சண்டையிட்டு வெளியூருக்கு வேலை தேடி வந்துள்ளார்.
அப்போது, இந்த கும்பலிடம் சிக்கிய அந்த பெண்ணை கடந்த சில மாதங்களாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் சிக்கி தவித்த அந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.
இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியில் வரும் இளம் பெண்களை குறிவைத்து இதுபோன்ற செயலில் ஈடுபடும் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தவறான நபர்களுடன் பழகுவதால் ஏற்படும் பாதிப்பை உணர வேண்டும் என்றும் போலீசார் அந்த பெண்ணுக்கு அறிவுரை வழங்கி முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.