சென்னை தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதியை சேர்ந்தவர் நஜூகான்(31). இவர் அங்குள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். ஆனால் இவர் கடந்த 3 மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் வீட்டு உரிமையாளர், நஜூகானிடம் வாடகை பணத்தை தரும்படி கேட்டுள்ளார். இப்போ, அப்போ என காலம் தாழ்த்திய நஜூ கானிடம் வாடகை பணத்தை கேட்டு அடிக்கடி வீட்டு உரிமையாளர் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நஜூகான், வீட்டு உரிமையாளரை கண்டிப்பதாக கூறி அவரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த வீட்டு உரிமையாளர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து அவர் தகவல் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாலியல் தொல்லை குறித்து தகவல் தெரிவித்ததும், அதனை அறிந்து நஜூகான் தலைமறைவாகிவிட்டார் என்பது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நஜூகானை தேடிவந்தனர்.
இந்நிலையில், தண்டையார்பேட்டை பகுதிகளில் சுற்றித்திரிந்த நஜூ கானை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். புகாரின்படி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் நஜூகானை போக்சோவில் கைது செய்தனர்.