சென்னை: சென்னை வேப்பேரியில் ஹோட்டல் உரிமையாளர் காரை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டார். வேப்பேரி ஜவஹர்நகரைச் சேர்ந்த வீரமணி (59) ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். வீரமணி புதன்கிழமை வேப்பேரி டாக்டர் அழகப்பா சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் டிராபிக் ராமசாமி வழியை மறித்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தாராம். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த வீரமணி, டிராபிக் ராமசாமியை சாலை ஓரம் நின்று பேட்டியளிக்குமாறு கூறினாராம். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, முற்றியதில், டிராபிக் ராமசாமி, வீரமணியின் கார் கண்ணாடியை உடைத்து, வீரமணிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து வீரமணி, வேப்பேரி காவல் நிலையத்தில் செய்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக தி.நகரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த டிராபிக் ராமசாமியை போலீஸார் வியாழக்கிழமை இன்று அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமசாமி, சைதாப்பேட்டை 14வது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கயல்விழி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில், டிராபிக் ராமசாமி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமி சிறையில் அடைப்பு
Popular Categories


