
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் 4 வழிச் சாலை அருகே செவ்வாய் கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் தாய், மகன் பலியாகினர். மேலும், 4 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர் தனது உறவினர்களுடன் தனிக் காரில் திருச்செந்தூருக்கு சென்றுள்ளார். காரை ஆனந்த்(32) என்பவர் ஓட்டியுள்ளார். கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் திண்டுக்கல்லுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆவியூர் அருகே உள்ள 4 வழிச் சாலையில் வந்த போது, காரின் பின் பக்க டயர்கள் இரண்டும் திடீரென வெடித்தது. இதில் நிலைதடுமாறி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் தலைகுப்புறக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் ஆனந்த் மற்றும் அவரது தாயார் மீனா(53) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், காரில் சென்ற, அய்யாத்துரை(38), அவரது மனைவி மாலா(35), அவரது மகன் யோகித்(8), ஓட்டுநரின் மனைவி உத்திரசெல்வி(28) ஆகியோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
