ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நேற்று நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். கேரளம் மாநிலம், மலப்புரா மாவட்டம், வழியாடு கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் 12 பேர் வேன் ஒன்றின் மூலம் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் வந்த வேன், ராமநாதபுரம் அருகே மதுரை – மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் அரியமான் கடற்கரைப் பகுதியில் சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் வேன் ஓட்டுநர் சலீம் (28), உதவி ஓட்டுநர்கள் சமீர் (24), ரியாஸ் (24) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் இருந்த கட்டடத் தொழிலாளர்கள் 9 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் கவிழ்ந்து விபத்து: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த குளிர்பானம், பால் விற்பனை முகவரான தாமோதரன் என்பவர், தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் நயினார்கோவில் அருகே ஏ.பனையூர் கிராமத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கார் வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், தாமோதரனின் மனைவி அனுசூயா (60), மகள் பிரியதர்ஷினி (38), உறவினர் கேசவன்(55) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

