மதுரை:
கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த மன்றத்தினரின் எதிர்பார்ப்புகளை போக்கும் விதமாக, மக்கள் நீதி மய்யம் என்று ஒரு அமைப்பின் பெயரைப் போல் உள்ள பெயரைப் பொறித்த கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரை ஆற்றினார் கமல்ஹாசன்.
நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து இன்று காலையில் தொடங்கினார். பின் அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை வெளியே நின்று பார்வையிட்டு, பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கே மீனவர்களுடன் 2 நிமிட சந்திப்பை முடித்து விட்டு, மதுரை நோக்கிக் கிளம்பினார்.
ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரை வந்தடைந்த கமல், இரவு 7.15 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுரை ஒத்தக்கடை மைதானத்துக்கு வந்தார். உடன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலையும் அழைத்து வந்தார். பின் பொதுக்கூட்டம் தொடங்கியது. முதலில், இயக்குனர் ராசி அழகப்பன், கவிஞர் சினேகன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து சில நிமிடங்களில் மேடைக்கு வந்த கமல், கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
செஞ்சிலுவைக் கொடியைப் போல், வெள்ளை நிற பின்னணியில் ஆறு கரங்கள் கோத்திருக்கின்றன. மூன்று வெண்மை நிற கரங்களும் மூன்று சிவப்பு நிற கரங்களும் ஒன்றை ஒன்று இணைத்திருப்பது போலும், நடுவில் கருப்பு நிற பின்னணியில் வெள்ளை நிற நட்சத்திரம் உள்ளது போன்றும் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கொடியிலேயே கட்சியின் பெயரும் எழுதப் பட்டிருந்தது. அதில், ‘மக்கள் நீதி மய்யம்’ என்று எழுதப் பட்டிருந்தது. அதுதான் தனது கட்சியின் பெயர் என்று கமல் அறிவித்தார். இதை அடுத்து, ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.
கட்சி சின்னத்தில் தொழிலாளர்களின் உழைக்கும் கரங்களான சிவப்பு நிற கரங்கள் இடம்பெற்றுள்ளன. திராவிடம், கம்யூனிசம் என எந்த இசத்தையும் தான் பின்பற்றவில்லை என்று கமல் சொன்னாலும் கட்சிக் கொடியின் நடுவில் ஒரு நட்சத்திரமும் கறுப்பு வண்ணமும் உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னத்தில் இடம்பெற்றிருப்பது போல நட்சத்திரம் உள்ளதால் கம்யூனிசத்தை பின்பற்றி இருக்கலாம் என கூறப் படுகிறது.
மக்கள் நீதி மய்யம் என்று தனது கட்சியின் பெயரை அறிவித்த கமல், தாய்மொழி தினமான இன்று, மையம் என்ற ‘ஐ’ எழுத்து ஏதோ அன்னிய மொழி எழுத்தைப் போன்று நினைத்துக் கொண்டு, ‘மய்’யம் என்று கூறியுள்ளார். இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சீர்திருத்த எழுத்து எனப் படுகிறது. ஆனால், தமிழ் அறிஞர்கள் மை என்ற எழுத்தையே எழுதத் தொடங்கினர். இவ்வாறு கட்சியின் பெயரை அறிவித்ததோடு சொல்லிப் பழகுங்கள் கட்சியின் பெயரை மக்கள் நீதி மய்யம்- என்று உரக்கச் சொன்னார்.
அப்போது பேசிய அவர், ‘நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோற்றை உதாரணமாக்கி இருக்கிறேன். இந்த சோற்றுப் பருக்கையை தொட்டுப் பார்த்தால் ஊழலில் தோய்ந்தவர்களின் கை விரல் சுடும். இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது; இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல. மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான கட்சி, நான் உங்கள் கருவி. தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் பல கூட்டங்கள் நடைபெறும்’ என்று பேசினார்.
அதன் பின்னர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேலு அறிவிக்கப்பட்டார்.