தென்காசி மாவட்டம், தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன்கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமையன்றும் நடைபெறும்.
ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று இப்பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில்பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை, வேல்பூஜை நடைபெற்றது. முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வெங்கடாம் பட்டி, வெய்க்காலிப்பட்டி, சின்னகுமார்பட்டி, மயிலப்பபுரம், தேரி குடியிருப்பு, ராசப்ப நாடானூர், அரியப்பபுரம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பாதயாத்ரையாக வந்திருந்தனர்., ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
