சென்னை:
தனது நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்த்ததற்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக கௌதமி கூறிய புகாருக்கு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். கௌதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் எனது கம்பெனியில் இருக்கும் அதிகாரிகள் அதனைப் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறினார்.
முன்னதாக, துபையில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்குக் கொண்டு வருவதில் கால தாமதம் ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் கமல்.
ஸ்ரீதேவியுடன் அதிக அளவிலான தமிழ்ப் படங்களில் ஜோடியாக நடித்தவர் கமல்ஹாசன். ஸ்ரீதேவியுடன் ரஜினிகாந்த்தும் அதிக அளவில் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீதேவி மரணத்துக்கு அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற, ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் போனி கபூர் வீட்டுக்கு சென்றனர். அங்கு ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். நடிகர் கமல்ஹாசன், பின்னர் சென்னைக்குத் திரும்பியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல், ‘ஸ்ரீதேவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி விட்டு வருகிறேன். ஐஐடி வளாகத்தில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது கண்டனத்துக்கு உரியது. தமிழ்த் தாய் வாழ்த்தை தமிழகத்தில் கண்டிப்பாக பாட வேண்டும்.’ என்று கூறினார்.
முன்னதாக, கடந்த 3 நாட்களாக மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிற்கு நடிகர், நடிகைகள் சென்று போனி கபூரின் தம்பி அனில்கபூர் அவரது மனைவி சுனிதா, போனி கபூரின் தாயார், குடும்பத்தினர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.