சென்னை:
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் புகார்களுக்கு இடமளிக்காமல், நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் பல்கலை. துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறவுரை, அறிவுரை கூறினார்.
அண்மையில் கோவை பல்கலைக்கழகம் மற்றும் சில பல்கலை.களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ஊடகங்களில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இவை தமிழக உயர் கல்வித் துறைக்கு பெரும் தலைக்குனிவையும், அவமானத்தையும் ஏற்படுத்தின. இந்நிலையில், அனைத்து பல்கலைக் கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்.
சனிக்கிழமை காலை 10.30க்கு கூட்டம் துவங்கியது. பின் நண் பகல் 1 மணி வரை நீடித்தது. துணைவேந்தர்கள், பதிவாளர்களுடன் ஆளுநர் உரையாடிய பின்னர், அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பின், ஆளுனரின் செயலர் ராஜகோபால், துணைச் செயலர் முத்துகுமார் ஆகியோர் துணைவேந்தர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பின்னர் மாலை 5.30 க்கு, கூட்டம் நிறைவடைந்தது.
இந்தக் கூட்டத்தில், துணைவேந்தர்கள் இடையே நடந்தபடியே ஆளுநர் பேசியதாவது, “அனைத்து பல்கலை.யிலும் ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிய விரும்புகிறேன். கல்வித் தரத்தை உயர்த்த மாணவர் எண்ணிக்கையை உயர்த்த, ஆராய்ச்சிப் படிப்பை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை, விளக்க அறிக்கையாக ஆளுநர் மாளிகையில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து தெரிவியுங்கள். பல்கலை.,யை மேம்படுத்த எந்த மாதிரியான திட்டங்களை வைத்துள்ளீர்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். பணியாளர் நியமனம், பணி மேம்பாடு, பல்கலை மானியக் குழு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவது போன்றவற்றில் முறைகேடு இருக்கக் கூடாது. எதிலும் ஊழல் புகாருக்கு இடமளிக்கக் கூடாது. வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.
உயர் கல்வித் துறையில் எந்தப் புகாருக்கும் இடமளிக்காதவாறு பணியாற்ற வேண்டும். ஊடகங்களில், பல்வேறு முறைகேடுகள் வெளியாகி பல்கலை.களின் பெயர் கெடுகிறது. இதுபோன்ற புகார்களுக்கு இடமளிக்காத வகையில் அனைவரும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். என்று பேசினார் ஆளுநர்.


