வேலூர்:
தேர்தல் வரட்டும், அரசியல்ல யார் காணாம போவாங்கன்னு பார்க்கலாம் என்று கூறினார் தேமுதிக., தலைவர் விஜயகாந்த்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமை நேற்று கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசியபோது “நடிகர்கள் பலர் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வர் பதவிக்கு கனவு காண்கிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் விஜயகாந்த் போன்று காணாமல் போவார்கள்” என்று கமல், ரஜினியை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசினார். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து காணாமல் போனதுபோல் கமலும் காணாமல் போவார் என்று அவர் பேசியது குறித்து, ரஜினியும் கமலும் எதுவும் சொல்லாத நிலையில், சம்பந்தப் பட்ட விஜயகாந்திடம் செய்தியாளர்கள் பதிலளிக்குமாறு கேட்டனர்.
வேலூர் மாவட்டம் அரியூரில் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டது பற்றி கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த விஜயகாந்த், யார் காணாமல் போவார்கள் என தேர்தலுக்கு பின் பார்க்கலாம். யார் காணாமல் போவார்கள் என்று கூடிய விரைவில் தேர்தல் வரும் போது தெரியும். காணாமல் போவது தே.மு.தி.க கட்சிகாரர்களா அல்லது அ.தி.மு.க. கட்சிகாரர்களா என்பதை தேர்தல் வரும்போது பார்ப்போம் என்றார்.


