சென்னை:
இன்று லெனின், நாளை ஈ.வே.ரா., என்று கூறி, பின்னர் தன் கருத்தில் இருந்து பின்வாங்கிக் கொண்டார் ஹெச்.ராஜா. இந்தக் கருத்துக்காக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் காட்சி செய்தி ஊடகங்களின் கருத்துப் பரவலாக்கத்தால் கொதிப்படைந்த சிலர் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் அப்பாவி பிராமணர்களின் பூணூலை அறுத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 4 பேர் போலீஸில் சரணடைந்தனர். 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஏற்கெனவே, கடந்த காலங்களில் பார்ப்பன வெறுப்பு அரசியலை விதைத்து, அதன் வழியே திராவிட அரசியல் எனும் போர்வையில் இயங்கி வருகின்றனர் திராவிடர் கழகத்தினர். ஈ.வே.ரா., பெரியார், இளவயது பெண்ணை திருமணம் செய்த போது, அவருடைய கொள்கைகள் பிடிக்காமல் திமுக., எனும் கட்சியை தொடங்கி அண்ணாதுரை திராவிட அரசியல் களம் கண்டார். அவருக்குப் பின் மு.கருணாநிதியின் ஆதிக்கத்தில் இருந்த கட்சியில், கணக்கு கேட்டு பின் வெளியேற்றப் பட்டு, அதிமுக., எனும் கட்சியைக் கண்டார் எம்.ஜி.ஆர். அந்தத் திக.,வில் இருந்தே கணக்கு எனும் பிணக்கால் தி.க.வில் இருந்து தபெதிக., உருவாகி, பார்ப்பன எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு அரசியலை நடத்தி வருகிறது.
ஏற்கெனவே, தனது கருத்தை வாபஸ் பெற்றுவிட்ட ஹெச்.ராஜாவைக் கண்டித்து, அவர் சார்ந்த பாஜக., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க, பிராமணர் சங்கம் எனும் பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் நாராயணன் என்பவரும் சங்கத்தின் பெயரில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், ஹெச்.ராஜாவின் கருத்தை கண்டிப்பதாகக் கூறினார். அதற்கு பலனாக, இன்று மயிலாப்பூர், திருவல்லிக்கேணியில், தபெதிக.,வினர் 8 பேர் கொலை வெறியுடன் தெருக்களில் இரு சக்கர வாகனங்களில் சுற்றி, கண்ணில் பட்ட அப்பாவி பிராமணர்களின் பூணூலை அறுத்துள்ளனர்.
4 இரு சக்கர வாகனங்களில் வந்த வெறியர்களின் தாக்குதலுக்கு பயந்து பாதிக்கப்பட்டவர்கள் ஓடிய நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் போலீஸாருக்கு புகார் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீஸார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து, நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் குறித்து விசாரித்தனர்.
இதையடுத்து அவர்களது படங்களை போலீஸார் வெளியிட்டனர். போலீஸார் வெளியிட்ட படங்களில் இருப்பவர்கள் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எனபது தெரிய வந்தது. இந்நிலையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த பெரியார் திராவிட கழக அமைப்பினரில் பிரபாகரன், ராவணன், உமாபதி, ராஜேஷ் ஆகிய நான்கு பேர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆணையர் வினோத் முன்பு சரணடைந்தனர். சரணடைந்த 4 பேர் தவிர மீதமுள்ள 4 பேரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.