சென்னை: மம்மி, டாடி என அழைக்க குழந்தைகளைப் பழக்கக் கூடாது; அம்மா அப்பா என அழைக்க பழக்குங்கள் என்றும், தாய்மொழிக்கு முதலில் முக்கியத்துவம் கொடுங்கள், பிறகு மற்ற மொழியைக் கற்றுக் கொள்ளலாம் என்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார்.
சென்னை கிண்டியிலுள்ள தனியார் விடுதியில் ஹிந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் 50ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி குறித்தெல்லாம் இளைய தலைமுறையினருக்குத் தெரிவதில்லை. தாய் மொழியை ஒருபோதும் நாம் மறக்கக் கூடாது. குழந்தைகளுக்கு தாய்மொழியைக் கற்றுத் தர வேண்டும். மம்மி, டாடி, என்ற கூறுவதைக் காட்டிலும், அம்மா, அப்பா என்று அழைக்கும் வகையில் குழந்தைகளை பெற்றோர் பழக்க வேண்டும். தாய்மொழிக்கே நாம் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு மற்ற மொழியைக் கற்று கொள்ளலாம் என்று பேசினார்.
மேலும், தூய்மை இந்தியா திட்டம் ஏதோ பிரதமர் மோடிக்கான திட்டம் என்கிறார்கள். அவர் அவருக்கானது மட்டுமல்ல, அனைத்து மக்களுக்குமானது என்று பேசினார் வெங்கய்ய நாயுடு.