ஒரு பாம்பு ரெண்டு பாம்பு பார்த்தாலே ஊரைக்கூட்டி களேபரம் செய்துவிடுவோம் நாம். ஆனால் ஒரு தொழிலாளியின் வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புகள் குவியல் குவியலாய் இருந்தது கண்டு அதிர்ந்து, தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்து, அவற்றைப் பிடிக்க உதவியிருக்கிறார் என்றால் ஆச்சரியம்தானே! அதுவும் முட்டைகளில் இருந்து உடைந்து பாம்புக்குட்டிகள் நெளிந்து வளைந்து வெளியேறிய போது அவற்றைக் கண்டு அதிர்ச்சி அடையாமல் யார் தான் இருப்பார்கள்?!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன். தொழிலாளியான இவர் இன்று காலை தனது வீட்டின் பின்புறம் ஒரு வேலையாகச் சென்றுள்ளார். அப்போது ஒரு இடத்தில் இருந்து ஓரிரு பாம்புகள் வெளியே வருவது தெரிந்தது. அவற்றை கூர்ந்து கவனித்தால் ஒரு சிறிதும் பெரிதுமாய் நூற்றுக்கும் மேற்பட்ட பாம்புகள்… எண்ணத்தான் முடியுமா அவற்றை எல்லாம்?! ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட கொடிய விஷம் கொண்ட பாம்புக் குட்டிகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக பின்னிப் பிணைந்து, ஊர்ந்து கொண்டிருந்தன.
பாம்புக் குட்டிகளுக்கு அருகே, சிறு சிறு பாம்பு முட்டைகள்… அவை எல்லாம் ஒரே குவியலாய்க் கிடந்துள்ளன. அவையும் சுமார் 80க்கும் அதிகமான பாம்பு முட்டைகளின் குவியலாய்க் கிடந்தன. அந்த முட்டைகளில் இருந்து ஒவ்வொரு பாம்புக் குட்டியும் அப்படியே உடைந்து வெளியே வரத் தொடங்கின. இவற்றை எல்லாம் பார்த்த தொழிலாளி ஜானகிராமன் அதிர்ந்து போனார். எப்படி எங்கேயிருந்து இந்தப் பாம்புகள் வந்தன என்று அவருக்குப் பெரிய ஆச்சரியம்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்க்கம்பக்கத்து மக்கள் ஓடி வந்தார்கள். இவற்றை எல்லாம் அடிப்பது சாத்தியம் இல்லை என்று அதிர்ச்சியுடன் கூறினர். பாம்புகளும் பாம்புக்குட்டிகளும் முட்டைகஉய் ஒரே குவியலாய்க் கிடந்தது கண்டு உடனடியாக குடியாத்தம் நகர தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மேகநாதன் தலைமையில் உதவி அலுவலர் மூர்த்தி, தீயணைப்பு வீரர்கள் முத்து ராஜா, சதீஷ், சுரேஷ், ரவிச்சந்திரன் என ஒரு குழு ஜானகிராமன் வீட்டுக்கு விரைந்தது. அவர்களும் இந்தப் பாம்புகளைக் கண்டு அதிசயித்தனர். தாங்கள் இவ்வாறு பாம்புக் குட்டிகளை மொத்தமாய்க் கண்டதில்லை என்று கூறி, 100-க்கும் மேற்பட்ட அந்தக் கொடிய விஷப் பாம்புக் குட்டிகளை அங்கிருந்து எடுத்தனர்.
பாம்புக் குட்டிகளைப் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், குவியலாய் ஒட்டிக் கொண்டிருந்த முட்டைகளில் இருந்து பாம்புக் குட்டிகள் ஒவ்வொன்றாய் வெளியே வந்த வண்ணமிருந்தன. அவற்றை எல்லாம் ஒரு தொகுப்பாய்ப் பிடித்து பெரிய பிளாஸ்டிக் வாளியில் போட்டு வைத்த தீயணைப்புத் துறையினர், உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவை எந்த வகைப் பாம்புகள், எப்படி இங்கே வந்தன என்பது குறித்து தெரியாமல் இருந்தது அவர்களுக்கு. பின்னர், அங்கே வந்த வனத்துறையினர் அந்தப் பாம்புக் குட்டிகளைப் பிடித்ததுடன் முட்டைகளையும் எடுத்துக் கொண்டனர்.
பாம்பு முட்டைகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு நச நசவென்று கூழ் போல் ஒட்டும் தன்மையுடன் இருந்தன. இவ்வாறு அங்கிருந்து அள்ளப் பட்ட பாம்புக் குட்டிகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது உடனடியாகத் தெரியவில்லை.
வனக் காப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான வனத் துறைப் பணியாளர்கள், அந்தப் பாம்புக் குட்டிகள் எந்த வகை என கண்டறிந்து வருகின்றனர். அவற்றை சரிபார்த்து, வனப்பகுதியில் விடலாம் என்ற யோசனையில் உள்ளனராம்!