திருவண்ணாமலையில் பள்ளி மாணவியின் தலைமுடியை கத்திரித்த ஆசிரியைகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருவண்ணாமலை-போளூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில், கருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 5) அன்று சுருட்டையாக இருந்த தலைமுடிக்கு “கிளிப்’ போட்டு வந்திருந்த அந்த மாணவியை பள்ளி ஆசிரியை சுமதி சக மாணவர்கள் முன்னிலையில் கண்டித்துள்ளார். பின்னர், மாணவியின் தலைமுடியையும் ஆசிரியை கத்திரித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். அவர்கள் மாணவியை சமாதானப்படுத்தினர். இருப்பினும் அன்றைய தினம் இரவு மாணவி எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம், மாணவியின் தலை முடியைக் கத்திரித்தது தொடர்பாக பள்ளி ஆசிரியைகள் இருவரை பணியிடை நீக்கம் செய்தது.

