வரி செலுத்தாத வி.ஐ.பி.க்கள் பட்டியல்: சென்னை மாநகராட்சி வெளியீடு

Published:

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் சில அரசியல் வி.ஐ.பி.க்கள் இருக்கின்றனர். அவர்களின் பெயர், முகவரி, செலுத்த வேண்டிய தொகை என அனைத்து விவரங்களையும் சென்னை மாநகராட்சி இணைய தளத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டது. அதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸும் விநியோகிக்கப்பட்டது. இருப்பினும் மாநகராட்சியின் நடவடிக்கைகளை சிலர் கண்டுகொள்ளவில்லை. இந்த பட்டியலில் முதலில் இடம் பிடித்து இருப்பவர் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசியா. இவருக்கு சொந்தமான ஓட்டல் தி.நகரில் உள்ளது. இந்த ஓட்டல் 4 கோடியே 21 லட்சத்து 75 ஆயிரத்து 19 ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது. இந்த தொகையை செலுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததும் ஒரு கோடி ரூபாயை மட்டும் செலுத்தி விட்டு மீதமுள்ள தொகைக்கு மாநகராட்சியிடம் மேல்முறையீடு செய்திருக்கிறது ஓட்டல் நிர்வாகம். தி.மு.க. பிரமுகரைப் போல மேலும் சில வி.ஐ.பி.க்களின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது. மாநகராட்சி வெளியிட்ட பட்டியலில் அடுத்த இடத்தில் ‘கிவ்ராஜ் டெக் பார்க் பிரைவெட் லிமிடெட்’ உள்ளது. இந்த நிறுவனம் 2 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 679 வரி பாக்கி வைத்துள்ளது. இதே போன்று ரமணி ஓட்டல் லிமிடெட் ராமி மாலுக்கு ஒரு கோடியே 15 லட்சத்து 55 ஆயிரத்து 811 ரூபாயும், ஆயிரம் விளக்கில் உள்ள டிஎம்பி அன்வர் அலி, 98 லட்சத்து 94 ஆயிரத்து 652 ரூபாயும், மீனம்பாக்கம், நியூ கார்கோ காம்பளக்ஸிக்கு 57 லட்சத்து 72 ஆயிரத்து 494 ரூபாயும், மயிலாப்பூர் சென்னை சிட்டி சென்டர் 38 லட்சத்து 18 ஆயிரத்து 149 ரூபாயும்,  சி.எஸ்.ஐ. டயோசீசன் 23 லட்சத்து 60 ஆயிரத்து 492 ரூபாயும், தி.நகரில் உள்ள சைரன் வேளாங்கண்ணி சீனியர் மேல்நிலைப்பள்ளி 13 லட்சத்து 34 ஆயிரத்து 60 ரூபாயும், ஆயிரம் விளக்கில் உள்ள பார்க் ஓட்டல் லிமிடெட் 11 லட்சத்து 7 ஆயிரத்து 356 ரூபாயும் உள்பட 182 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 26 கோடியே 57 லட்சத்து 73 ஆயிரத்து 139 ரூபாய் வரி பாக்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img