சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனாவை கோட்டையில் சந்தித்து புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது அ.தி.மு.க.வினர் நேற்று கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எங்கள் வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அமைதியாக நடந்து கொண்டிருந்த பிரசாரத்தை சீர்குலைக்கும் வகையில் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த சம்பவம் போலீசாரின் அனுமதியுடன்தான் நடந்திருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை அங்கிருந்து மாற்ற வேண்டும். அங்கு ஜனநாயகம், பணநாயகமாக மாறி இப்போது அராஜகமாக உருவெடுத்துள்ளது. 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அந்த பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி விட்டு புதுபட்டியல் வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை நீக்கப்படவில்லை. அவர்கள் அராஜகம் செய்வதற்காகவே தொகுதியில் முகாமிட்டுள்ளனர். திருப்திகரமாக திருத்தப்பட்ட பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அவ்வாறு திருத்திய பட்டியலை வெளியிட முடியாவிட்டால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். சட்டம்–ஒழுங்கு கெட்டு ஒரு அசாதாரண நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. பொதுத்தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கனவே பணப்பட்டுவாடா முடிந்து விட்டது. இப்போதுதான் நடவடிக்கை எடுக்க தொடங்கி இருக்கிறார்கள். இது காலதாமதமான நடவடிக்கை. சொத்து குவிப்பு வழக்கில் முதல்–அமைச்சர் தண்டனை பெற்றதால் இடைத்தேர்தல் வந்திருக்கிறது. பொதுமக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். – என்றார்.
தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் புகார்
Popular Categories


