சென்னை: அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அரசு வழக்கறிஞர்கள் நியமன நடைமுறைகளுக்கான விதிகளை வகுக்கும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் நியமனம் குறித்த விதிகளை தமிழக அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையில்லை எனக் கூறி, அந்த விதிகளை ரத்து செய்யுமாறும், அதுவரை அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் வழக்கறிஞர் வசந்தகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கு தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்காமல் அரசு தலைமை வழக்கறிஞரே தேர்வு செய்து நியமிக்கிறார் என மனுதாரர் குற்றம் சாட்டினார்.
ஆனால், அரசு தலைமை வழக்கறிஞர் தமிழக அரசுக்கு அனுப்பும் பட்டியலில் இருந்து தலைமை வழக்கறிஞர், பொதுத்துறை, உள்துறை மற்றும் சட்டத் துறை செயலாளர்கள் அடங்கிய குழு தேர்ந்தெடுத்து அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்துள்ள விதிகள், நியமன விதிகளாகவே உள்ளன என்றும், நியமன நடைமுறைகளுக்கான விதிகள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டனர். எனவே, விண்ணப்பங்களை வரவேற்று, தகுதியானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதற்கான நடைமுறை விதிகளை வகுத்து வெளியிட வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்யக் கூடாது எனவும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கினர்.




