சென்னை: சீரியல் நடிகை ஜெயலட்சுமியிடம் தொடர்ந்து செல்போன்களில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது செய்யப் பட்டனர்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. நேபாளி படத்தில் அறிமுகமான இவர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தற்போது டிவி சீரியல்களில் நடித்து வரும் இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட செல்போன் எண்களில் இருந்து வாட்ஸ்அப் மூலம் பல தொடர் தகவல்கள் வந்தன.
நீங்கள் டேட்டிங்கை விரும்புகிறீர்களா? உங்களுடன் வர வி.ஐ.பி.க்கள் காத்திருக்கிறார்கள். ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையிலும் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள் என செய்தி அனுப்பி பாலியல் தொழிலுக்கு வலைவிரித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். அதில் தனக்கு செல்போனில் தேவையற்ற அழைப்புகளை அனுப்பி தொல்லை தரும் நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப் படும் என்று அவர் உறுதியளித்தார்.
அதன்படி, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகப்பெருமான், கவியரசன் இருவரும் நடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி தொல்லை தந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை பிடிக்க வாடிக்கையாளர் போல பேச்சு கொடுத்த போலீசார், அண்ணாநகர் பகுதிக்கு வரவழைத்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.