கோவில்பட்டி அருகே பலத்த காற்று காரணமாக ரயில்கள் இயக்கப்படும் மின்சார வயர் அறுந்து விழுந்ததால், ரயில் ஆங்காங்க நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கோவில்பட்டி பகுதியில் இன்று மாலை 3 மணிக்கு மேல் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து சாத்தூர் செல்லும் வழியில் நள்ளி ரயில் நிலையத்துக்கு இடையே உயர் அழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்து விட்டது.
இதனால் கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு 3 மணிக்கு வந்த திருநெல்வேலி – மும்பை தாதர் விரைவு ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து 5 மணிக்கு வந்த திருநெல்வேலி – ஜமுதாவி விரைவு ரயிலும் கோவில்பட்டியிலேயே நிறுத்தப்பட்டது.
இதே போல், கோயம்புத்தூர்- நாகர்கோவில் பயணிகள் ரயில் சாத்தூர் ரயில் நிலையத்திலும், தூத்துக்குடி – மைசூர் விரைவு ரயில் குமாரபுரம் ரயில் நிலையத்திலும், சென்னை-குருவாயூர் விரைவு ரயில் துலுக்கர்பட்டியிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.
திருநெல்வேலியில் இருந்து ரயில்வே மின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து மின் வயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடுமை அவதிக்குள்ளாகினர்.


