ஆந்திரா வங்கி வாசலில் பெட்ரோல் விட்டு தீவைத்த வழக்குரைஞர்கள் 2 பேர் கைது

Published:

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் ஆந்திரா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி முன்பு நேற்று காலை ஆந்திராவில் போலீஸாரால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் 14 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மதியம் 2.45 வரை தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதன்பின்னர் மாலை வக்கீல்கள் ரசல், ஸ்டீபன்தாஸ் ஆகியோர் வங்கிக்கு வந்தனர். அங்கு வங்கி முன்பு இருந்த ஏ.டி.எம். மையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளியிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை வங்கியின் வாசலில் ஊற்றி தீவைத்துள்ளனர். இதில் வங்கியின் வாசலில் போடப்பட்டிருந்த மிதியடி எரிந்தது. உடனடியாக வங்கியின் அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் 2 வழக்கறிஞர்களையும் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் வக்கீல்கள் இருவரையும் கைது செய்தனர். அப்போது, வழக்குரைஞர் ஸ்டீபன்தாஸ் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தங்களை மிரட்டிய வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img