திருவண்ணாமலை: திருவண்ணாமலை வீதியில் வெள்ளை ஆடையுடன் இசைஞானி இளையராஜா. தெருவில் இறங்கி நடந்து சென்றதைக் கண்டு, அண்ணாமலைவாசிகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையாரை தரிசிக்க இசைஞானி இளையராஜா வந்துள்ளார். தீபத் திருநாளை முன்னிட்டு நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் வேளையில் அங்கே வந்த இளையராஜாவின் காரை காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். ஆனால் காரில் இளையராஜா இருப்பதாகக் கூறியுள்ளார் இசைஞானியின் உதவியாளர். ஆனால் காவலரோ, அதையெல்லாம் கவனத்தில் கொள்ளவில்லை. யாராயிருந்தாலும் அதான்.. என்று கூறிவிட்டார்.
காருக்குள் இருந்து கவனித்துக் கொண்டிருந்த இளையராஜா, உடனே காரை விட்டு இறங்கினார். எல்லோரையும் போல தெருவில் இறங்கி நடந்து வந்தார். கொளுத்தும் வெயிலில் சாலையில் இறங்கி, எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நடந்து வந்த இளையராஜாவைக் கண்டு திருவண்ணாமலைவாசிகள் பெரிதும் ஆச்சரியப் பட்டுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிக்கு தகவல் சென்றது. தொடர்ந்து, சம்பந்தப் பட்ட காவலர் காத்திருந்து இளையராஜாவிடம் தன் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை வாழ் வாசகர் ஒருவர் தெரிவித்த போது…
தான் ஒரு பிரபலம் என்று அவர் தன்னை பற்றி எப்போதும் நினைத்தது இல்லை என்பதற்கு இசைஞானி அவர்களின் அந்தச் செயலே சாட்சி! திருவண்ணாமலை அண்ணாசாலை அருகே கார் ஒன்று நிறுத்தப்படுகிறது . இதற்கு மேல் உள்ளே செல்லக் கூடாது அனுமதி இல்லை என்று சில காவலர்கள் அந்த காரை தடுக்கிறார்கள். உள்ளே யார் இருக்கிறார் என்ற தகவல் சொல்லப்பட்டாலும் அந்தக் காவலர்கள் அதை காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை.
காரில் இருந்து வெள்ளை ஆடை உடுத்திய மனிதர் எதைப் பற்றியும் கவலைப் படாமல் இறங்கி நடக்கத் தொடங்கி விடுகிறார். சாலையில். என் கடையைக் கடந்து நடந்து செல்லும் போது தான் கவனித்தேன்… இளையராஜா மாதிரி இருக்கிறதே என்று!இசைஞானி இளையராஜா அவர்களேதான்.
இது நடந்தது தீபத்திருவிழா ஆறாம் நாள் மதியத்துக்கு மேல்! இதே ஒரு கட்சி சார்ந்த வட்டமோ மாவட்டமாகவே இருந்தால் நான் யார் தெரியுமா என்று எகிறி இருப்பார்கள் அந்தக் காவலர்களிடம்!
ஆனால் எதையுமே யோசிக்காத இசைஞானி அங்கிருந்து ரமணாஸ்ரமம் வரை நடந்தே போய்ச் சேர்கிறார் கூட்டத்தோடு கூட்டமாக! நானும் அவர் சென்றதை பார்த்து வியந்தேன் என்கிறார்.


