
பம்பை வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்ல கேரள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சபரிமலைக்குச் செல்ல புனலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பம்பை வரை பேருந்துகள் அனைத்தும் சென்றன. பல்லாண்டுகளாக, பம்பை வழியே சபரிமலைக்கு மலைப் பாதையில் சிறிய பாதை எனப்படும் குறுகிய தொலைவு பாதை உருவாக்கப் பட்ட பின்னர் பம்பை பகுதி பிரபலம் அடைந்தது.
இதனால் தமிழகத்தின் செங்கோட்டை, குமுளி ஆகிய ஊர்களின் வழியாக பம்பைக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப் பட்டன. இது பிரதான மலைப் பாதை ஆனது. சென்னையில் இருந்தும், செங்கோட்டை பணிமனைகளில் இருந்தும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், த.நா. அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த பேருந்துகள் பத்தனம்திட்ட, பம்பை வரை இயக்கப் பட்டன.

இந்நிலையில் திடீரென மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்ற காரணம் கூறி, பம்பைக்கு பதிலாக அதில் இருந்து 16 கி.மீ. ,தொலைவுக்கு முன் உள்ள நிலக்கல்லில் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப் பட்டு, அங்கிருந்து கேரள அரசு பஸ்களில் மட்டுமே பம்பைக்கு செல்லும் நிலை உருவானது.
இதனிடையே, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அண்மையில் சபரிமலை யாத்திரை சென்ற போது, நிலக்கல்லில் நிறுத்தப் பட்டார். விஐபி வாகனம் மட்டுமே பம்பைக்கு அனுமதிக்கப் படும் என்றும், உடன் வந்தவர்களை அனுமதிக்க முடியாது என்றும் போலீஸார் கூறியதால், மத்திய அமைச்சர் கேரள அரசு பேருந்திலேயே பயணம் செய்தார்.
இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது கேரள பஸ்கள் செல்லும்போது, அதே பாதையில் ஏன் தமிழக அரசு பஸ்களும் செல்ல முடியாது?! செல்லக் கூடாது என்று கேள்வி முன்வைக்கப் பட்டது. சுற்றுலா வாகனங்கள் வேண்டுமானால் பம்பையில் நெரிசலை ஏற்படுத்தக் கூடும், ஆனால் கேரள பஸ்களைப் போன்று தமிழக அரசு பஸ்களும் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு உடனே திரும்பப் போகின்றன எனும் போது, கேரள அரசு ஏன் அதற்கு தடை விதித்தது என்ற கேள்வி எழுப்ப பட்டது.
இந்நிலையில், நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட தமிழக அரசு பேருந்துகளை, பம்பை வரை இயக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பம்பை செல்ல கேரள அரசு பேருந்துகள் மற்றும் விஐபி வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது அனுமதி அளிக்கப் பட்டுள்ளதால், இனி தமிழக அரசு பேருந்துகள் பம்பை வரை செல்லலாம்.